ஸ்ரீரங்கம் ஜீயர், சிருங்கேரி சுவாமிகள் சுற்றுப்பயணம்
ஸ்ரீரங்கம் ஜீயர், சிருங்கேரி சுவாமிகள் சுற்றுப்பயணம்
UPDATED : ஜூலை 05, 2025 07:38 AM
ADDED : ஜூலை 05, 2025 06:00 AM

சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், இன்று மாலை 6:00 மணிக்கு மதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்கிறார்.
தென்திசையில் ஆதிசங்கரர் நிறுவிய சிருங்கேரி சாரதா பீடத்திற்கு, ராமேஸ்வரத்தை ஷேத்ரம் ஆக ஏற்படுத்தியுள்ளார். 1200 ஆண்டுகளுக்கும் மேலாக, ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கும்,சிருங்கேரி சாரதா பீடத்துடன் தொடர்பு உள்ளது.
இத்திருக்கோயிலில் ஆதிசங்கரர் காலம் தொட்டு பூஜிக்கப்பட்டு வரும் ஸ்படிக லிங்கமும், அதற்கு செய்யப்படும் அதிகாலை அபிஷேகமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ராமேஸ்வரம் கோயில் கருவறைக்குள் சென்று ஸ்ரீராமநாத சுவாமி மூலவருக்கு பூஜை செய்வதற்கு, சிருங்கேரி ஜகத்குருவிடம் மந்திர உபதேசம், சிவதீட்ஷை பெற்ற ராமேஸ்வரம் வாழ் மராத்திய அந்தண இனத்தை சேர்ந்தவர்கள், சிருங்கேரி சுவாமிகள் மற்றும் நேபாள மன்னர்களுக்கு உரிமை உண்டு.
ராமேஸ்வரம் வரும் சுவாமிகளுக்கு சிருங்கேரி மடத்தில், துாளி பாதபூஜை நிகழ்த்தப்பட்ட பின், இன்று இரவு 8:00 மணிக்கு கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஸ்ரீசாரதா சந்த்ரமவுலீஸ்வர பூஜை நிகழ்த்துகிறார். நாளை (ஜூலை 6) காலை சுவாமி தரிசனம் செய்த பின், திருச்செந்துார் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க புறப்பட்டுச் செல்கிறார்.
திருப்புல்லாணி கோவிலுக்கு ஸ்ரீரங்கம் ஜீயர் இன்று வருகை
திருப்புல்லாணி: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் ஜீயர் வராக மஹா தேசிகன் சுவாமிகள், இன்று மாலை, ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு வருகிறார். இங்கு தொடர்ந்து, 60 நாட்கள் தங்கி சிறப்பு பூஜைகள் செய்கிறார்.
ஆனி பவுர்ணமி முதல், ஆவணி பவுர்ணமி வரை, 60 நாட்கள் ஹிந்து மத துறவியர்கள் அனைவரும் ஒரே ஊரில் தங்கி உலக நன்மைக்கான பூஜைகள், யாக வேள்விகள், சதுர் மாஸ்ய சங்கல்ப சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
இந்த ஆண்டு இந்த விரதம் ஜூலை 10ல் துவங்கி செப்., 7ல் நிறைவடைகிறது. இந்த விரதம் மேற்கொள்வதற்காக வராக மஹா தேசிகன் சுவாமிகள், திருப்புல்லாணி வருகிறார். 60 நாட்களும் திருப்புல்லாணியில் தங்கி விரதம் மேற்கொள்கிறார்.
ஜூலை 10 காலை, சதுர் மாஸ்ய சங்கல்பம் துவங்குகிறது. அன்று மாலை திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில், அவர் மங்களாசாசனம் செய்கிறார்.
ஜூலை 13ல் சேதுக்கரை கடலில் புனித நீராடுகிறார். திருப்புல்லாணி ஆண்டவன் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்து தினமும் காலை, 8:00 மணிக்கு பூஜை செய்கிறார். இந்த 60 நாட்களில் சுவாமியை வணங்கி வழிபடுவது சிறப்பானது என்பதால் நாடு முழுதும் இருந்து ஏராளமான சீடர்கள், இங்கு வருகை தர உள்ளனர்.
- நமது நிருபர் -