வேணுகோபாலை சந்திக்க மறுத்த ஸ்டாலின்: தோல்வியடைந்த செல்வப்பெருந்தகை முயற்சி
வேணுகோபாலை சந்திக்க மறுத்த ஸ்டாலின்: தோல்வியடைந்த செல்வப்பெருந்தகை முயற்சி
UPDATED : பிப் 18, 2026 03:32 PM
ADDED : பிப் 18, 2026 07:11 AM

-நமது நிருபர்
த.வெ.க.,வுக்கு ஆதரவாக பேசி வரும் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி மீது, காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது.
கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு என்ற கோரிக்கையை, தி.மு.க.,விடம் தமிழக காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளது. அதற்கு வாய்ப்பே இல்லை என, முதல்வர் ஸ்டாலின் கைவிரித்து விட்டார். இந்த சூழலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து, சென்னையில் நேற்று நடந்த காங்கிரஸ் பேரணியில், அக்கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் பங்கேற்றார்.
அவரையும் முதல்வர் ஸ்டாலினையும் சந்திக்க வைக்கவும், முதல்வர் வீட்டில் தேநீர் விருந்து அளிக்கவும், காங்கிரசில் ஒரு தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், ஸ்டாலின் அதை விரும்பாததால் சந்திப்பு நடக்கவில்லை என, காங்., தரப்பில் கூறுகின்றனர்.
சென்னை முகப்பேர் பகுதியில் நேற்று நடந்த காங்கிரஸ் பேரணிக்கு, வேணுகோபால் வருகிறார் என தெரிய வந்ததும், ஆட்சியில் பங்கு கோரி, காங்கிரஸ் உரிமை மீட்பு குழு சார்பில், அப்பகுதியில் 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டன.
'அதிகாரமற்ற அரசியல் அர்த்தமற்ற அரசியல்; வேண்டும் வேண்டும் ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி வேண்டும்; சுயமரியாதையை இழந்து கூட்டணி வேண்டாம்' என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தி.மு.க., ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள், அந்த போஸ்டர்களை கிழித்தெறிந்தனர்.

