பாராட்டுகளும், நன்றியும்! புயல் பாதிப்பு மீட்புக்குழு நடவடிக்கையால் ஸ்டாலின் நெகிழ்ச்சி
பாராட்டுகளும், நன்றியும்! புயல் பாதிப்பு மீட்புக்குழு நடவடிக்கையால் ஸ்டாலின் நெகிழ்ச்சி
UPDATED : டிச 02, 2024 05:31 PM
ADDED : டிச 02, 2024 05:29 PM

சென்னை: புயலால் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் ஈடுபட்டு வரும் மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகளையும், நன்றியையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் யாரும் எதிர்பார்க்காத வகையில் விழுப்புரம் மாவட்டத்தை புரட்டி போட்டுள்ளது. அங்கு மழையால் ஏற்பட்டு உள்ள சேதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
தொடர் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள செய்யூர், மரக்காணம், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு வெள்ளச்சேதம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவிகளை வழங்கியதோடு, வீடுகள் சேதம், கால்நடை இறப்பு, பயிர்ச்சேதம் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிலைமையைச் சீர்செய்ய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், அத்தியாவசியச் சேவைகளை மீட்டெடுத்து வரும் மின்சாரத் துறை பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை, முக்கியமாகப் பேரிடர் தடுப்புப் படைப் பிரிவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளும், நன்றியும்!
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.