குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது ஸ்பெயின் சென்றுள்ள ஸ்டாலின் அறிவிப்பு
குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது ஸ்பெயின் சென்றுள்ள ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : பிப் 01, 2024 12:58 AM
சென்னை:'மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை, தமிழகத்தில் அமல்படுத்த முடியாது' என, அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் இருந்து, அகதிகளாக குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது.
சட்டமாக்கியது
அதற்காக, குடியுரிமை திருத்த மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்றி சட்டமாக்கியது. இந்தச் சட்டம், இன்னும் ஏழு நாட்களுக்கள் அமலுக்கு வரும் என, மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர், இரு தினங்களுக்கு முன் அறிவித்தார்.
அதற்கு எதிர்வினையாக, 'நான் உயிருடன் இருக்கும் வரை, மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த விடமாட்டேன். பொது சிவில் சட்டத்தையும் அமல்படுத்த விடமாட்டேன்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா நேற்று முன்தினம் அறிவித்தார்.
அவரை தொடர்ந்து, ஸ்பெயின் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினும், தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என அறிவித்து உள்ளார்.
அவர் தன், 'எக்ஸ்' பதிவில் கூறியிருப்பதாவது:
'மேற்கு வங்கம் மட்டுமின்றி, இந்தியா முழுதும் ஏழு நாட்களில் குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வரும்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார்.
போராட்டம் நடத்தியது
இலங்கை தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறுவதற்கு முழு முதல் காரணமே, பார்லிமென்டில் அ.தி.மு.க., ஆதரித்து ஓட்டளித்தது தான்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும், தோழமை இயக்கங்களுடன் இணைந்து, மிகப்பெரிய போராட்டங்களை தி.மு.க., நடத்தியது. இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று, அதை ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தது.
கடந்த 2021ல் ஆட்சிக்கு வந்ததும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
அனுமதிக்காது
தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதை, தி.மு.க., அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
மத நல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ., அரசின் நாசக்கார செயல்களையும், அதற்கு துணைபோகும் அ.தி.மு.க.,வின் நயவஞ்சக நாடகங்களையும், நாட்டு மக்கள் பார்க்கின்றனர்.
உறுதியாக சொல்கிறேன்... தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கால் வைக்க விட மாட்டோம்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.