ADDED : டிச 09, 2024 04:43 AM

ஈரோடு : ''வெள்ள எச்சரிக்கை கொடுக்காமல் சாத்தனுார் அணையை திறந்து விட்டு, வட மாவட்டங்களை ஸ்டாலின் அரசு வஞ்சித்துள்ளது,'' என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஈரோட்டில் இரண்டு நாட்கள் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நேற்று கூறியதாவது:
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், தி.மு.க., இறுமாப்புடன் இருக்கக்கூடாது என, நடிகர் விஜய் அவரது அரசியலை பேசி இருக்கிறார். இதற்கு தி.மு.க., அமைச்சர்கள் தரம் தாழ்ந்து விமர்ச்சித்து வருகின்றனர். மக்கள் பிரச்னையை தீர்க்காமல், தங்களுக்கு எதிராக பேசுபவர்களை தரக்குறைவாக பேசுவதை பாணியாக வைத்துள்ளனர்.
தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை குறிப்பிட்ட அலகு அடிப்படையில் மத்திய அரசு வழங்குகிறது. எந்த மாநிலத்தையும் மத்திய அரசு வஞ்சிப்பதில்லை. வெள்ள எச்சரிக்கை கொடுக்காமல் சாத்தனுார் அணையை திறந்து விட்டனர். இதன் மூலம் வட மாவட்டங்களை தி.மு.க., அரசு வஞ்சித்துள்ளது.
வெள்ள நிவாரண நிதி, மழை - வெள்ள பாதிப்புகளை கையாண்டது குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர, சபாநாயகரிடம் அனுமதி கேட்டுள்ளேன்; அனுமதி கொடுப்பாரா என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.