ADDED : ஜன 11, 2024 02:09 AM
சென்னை:முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டதால், சென்னை, அண்ணா சாலையில் உயர்மட்ட மேம்பாலச் சாலை அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில், தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே, 3 கி.மீ., உயர்மட்ட மேம்பாலச்சாலை அமைக்க, அரசு முடிவெடுத்து உள்ளது. இத்திட்டத்திற்கு, 621 கோடி ரூபாயை, ஜூலை மாதம் அரசு ஒதுக்கீடு செய்தது.
பணிகள், ஜன., மாதம் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்தன.
இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடக்க இருந்தது. நேற்று, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு, திடீர் உடல் சோர்வு ஏற்பட்டது.
இதையடுத்து, உயர்மட்ட மேம்பாலச் சாலை அடிக்கல் நாட்டு விழா உள்பட, முதல்வரின் நேற்றைய நிகழ்ச்சிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிகள் பின்னர் நடக்கும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

