சாலையில் ஆக்கிரமிப்பை சகிக்க முடியாது: உயர்நீதிமன்றம் கண்டிப்பு
சாலையில் ஆக்கிரமிப்பை சகிக்க முடியாது: உயர்நீதிமன்றம் கண்டிப்பு
ADDED : டிச 31, 2025 08:01 PM

மதுரை: மாநில நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை சகித்துக்கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை; மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
குஜிலியம்பாறை அருகே காசகரன்பட்டியில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள சொத்திலிருந்து ஆக்கிரமிப்பை காலி செய்ய வேடசந்துார் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உத்தரவிட்டார். அது சட்டவிரோதமானது; ரத்து செய்ய வேண்டும் என கன்னியம்மாள் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.
அரசு வழக்கறிஞர் மகாராஜன்: அந்நிலம் ஆரம்பத்தில் 'பாதை' என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், மாநில நெடுஞ்சாலைத்துறையால் கையகப்படுத்தப்பட்டது. தற்போது அதன் பராமரிப்பில் உள்ளது என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இவ்விஷயத்தில் எந்த முரண்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சகித்துக்கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை; ஏனெனில் ஆக்கிரமிப்புகள் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என பல வழக்குகளில் நாங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளோம்.
இவ்வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது.அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டியதுபோல் ஆட்சேபனைகள் எதுவும் இருந்தால் தெரிவிக்க ஏற்கனவே ஒரு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதற்கு பதிலளிக்க மனுதாரர் முயற்சிக்கவில்லை. அதன் பிறகே ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க நாங்கள் விரும்பவில்லை. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டத்திற்குட்பட்டு தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுத்து, முடிவிற்கு கொண்டுவர வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

