அரசு வழக்கறிஞர் பதவிகள்; காங்கிரசை டீலில் விட்ட தி.மு.க., சாதித்த கூட்டணி கட்சிகள்
அரசு வழக்கறிஞர் பதவிகள்; காங்கிரசை டீலில் விட்ட தி.மு.க., சாதித்த கூட்டணி கட்சிகள்
UPDATED : பிப் 20, 2025 04:08 AM
ADDED : பிப் 19, 2025 11:49 PM

மதுரை : தமிழகத்தில் ஆளுங்கட்சி சார்பில் வழங்கப்படும் அரசு வழக்கறிஞர் பதவிகள் பெறுவதில் கூட்டணி கட்சிகள் சாதித்த நிலையில், காங்., புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆளுங்கட்சியும் பொறுப்பேற்ற பின் தங்கள் கட்சி வழக்கறிஞர்களை கவுரவப்படுத்தும் வகையில் உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் பதவி வழங்குவது வழக்கத்தில் உள்ளது.
இதுபோல் மாநகராட்சிகள், மின்வாரியம், போக்குவரத்து துறைகளிலும் சட்ட அதிகாரி பதவிகள் வழங்கப்படும்.
இப்பதவிகள் ஆளுங்கட்சி, கூட்டணி கட்சிகளின் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும்.
இந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளையில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கப்பட்டது. இதற்கான முறையான அறிவிப்பு 2024 ஜூலையில் வெளியிடப்பட்டது.
இதற்காக தி.மு.க., கூட்டணி கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஏராளமானோர் முறையாக விண்ணப்பித்தனர்.
இரண்டு வாரங்களுக்கு முன் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள்.
இதில் தி.மு.க., வழக்கறிஞர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதுபோல் ம.தி.மு.க., வி.சி,. கம்யூ., தி.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வழக்கறிஞர்களுக்கும் இப்பதவியில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணியில் பெரிய கட்சியான காங்., வழக்கறிஞர்கள் ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை. இதனால் அக்கட்சி வழக்கறிஞர்கள் பிரிவு கொதிப்பில் உள்ளது.
இதை வெளிப்படுத்தும் வகையில், 'அரசு வழக்கறிஞர் தகுதி காங்., வழக்கறிஞர்கள் ஒருவர் கூட இல்லை என தி.மு.க., நினைக்கிறதா அல்லது அப்பதவிகளை தி.மு.க.,விடம் பேசி எங்களுக்கு பெற்றுத்தர காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு மனமில்லையா' போன்ற விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து காங்., வழக்கறிஞர்கள் கூறியதாவது: அழகிரி மாநில தலைவராக இருந்தபோதும் காங்., வழக்கறிஞர் ஒருவருக்கும் இப்பதவிக்கு அவர் சிபாரிசு செய்யவில்லை.
ஆனால் தற்போது அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஆளுங்கட்சியிடம் போராடி தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பதவி பெற்று சாதித்துள்ளன.
ஆனால் காங்., தலைமை இவ்விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை. இதை கூட மாநில நிர்வாகிகள் செய்வதில்லை என்பது கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்றனர்.

