ADDED : ஜன 01, 2024 11:39 PM

திருப்பூர் : கோவை மாவட்டம், சரவணம்பட்டியை சேர்ந்தவர் சித்ராதேவி, 44, அங்குள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர்.
கொடுமுடியில் உள்ள தன் தாய் வீட்டுக்கு சித்ராதேவி நேற்று தன் மகள் தேஜினி, 13, மகன் ஸ்ரீபிரவன், 11, ஆகியோருடன் 'மாருதி ஆல்டோ' காரில் சென்றார்.
பின், நேற்று மீண்டும் வீட்டுக்கு செல்ல கிளம்பி, காரில் கோவை நோக்கி பை-பாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
திருப்பூர் அருகே செங்கப்பள்ளி அருகே கார் வந்த போது, திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனே, காரை ரோட்டில் நிறுத்தி விட்டு, விரைந்து கீழே இறங்கினர். சில நிமிடங்களில் கார் கொழுந்து விட்டு எரிந்தது.
தகவலறிந்து சென்ற ஊத்துக்குளி தீயணைப்பு வீரர்கள் காரின் தீயை அணைத்தனர். எனினும், கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்து விரைந்து இறங்கிய காரணத்தால், மூவரும் உயிர் தப்பினர்.
கிருஷ்ணகிரி
பெங்களூரிலிருந்து, 36,000 லிட்டர் எத்தனால் ஏற்றிய டேங்கர் லாரி, கிருஷ்ணகிரி வழியாக கொச்சிக்கு சென்றது.
நேற்று மதியம், 3:45 மணிக்கு ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து, பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றியது.
கிருஷ்ணகிரி தீயணைப்புத் துறையினர் டேங்கர் லாரி தீயை அணைத்தனர். குருபரப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விபத்தின் போது, தீக்காயத்துடன் மீட்கப்பட்ட லாரி டிரைவரான, கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராமலிங்கம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இந்த விபத்தால், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

