திடீரென தேசிய தலைவரான நிதின் நபின்; புழுக்கத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள்
திடீரென தேசிய தலைவரான நிதின் நபின்; புழுக்கத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள்
ADDED : ஜன 24, 2026 06:35 AM

சென்னை: பா.ஜ., தேசியத் தலைவராக நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டதால், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ., முன்னாள் தலைவர் நட்டாவின் பதவிக்காலம், கடந்த 2024ம் ஆண்டிலேயே நிறைவடைந்தது. லோக்சபா தேர்தல் காரணமாக, பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 14ல், பீஹாரைச் சேர்ந்த நிதின் நபின், செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, கடந்த 20ம் தேதி, பா.ஜ., தேசியத் தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயல் தலைவராக அறிவிக்கப்படும் வரை, நிதின் நபினை பீஹாருக்கு வெளியே பா.ஜ.,வினருக்கு கூட தெரியாது.
காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஒரே குடும்பத்தில் இருந்தே, தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலையில், சாதாரண தொண்டரை, தேசியத் தலைவராக பா.ஜ., தேர்ந்தெடுத்துள்ளது.
பிரதமர் மோடியே, 'கட்சியில் இனி என் 'பாஸ்' நிதின் நபின்' என்கிறார். 'வேறு கட்சியில் இது சாத்தியமா' என, சமூக ஊடகங்களில் பா.ஜ.,வினர் வாதிட்டு வருகின்றனர். ஆனால், மறுபக்கம், நிதின் நபின் தேர்வு, பா.ஜ.,வுக்குள்ளேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அவரை தேர்வு செய்தது பிரதமர் மோடி என்பதால், வெளிக்காட்டிக் கொள்ளாமல், மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பதாக பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.
இது தொடர்பாக, பா.ஜ., தலைவர் ஒருவர் கூறியதாவது: பா.ஜ.,வில் ஜாதி, மொழி, வயது வித்தியாசம் இன்றி, யார் வேண்டுமானாலும் முதல்வர், தேசியத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட எந்த பதவிக்கும் வரலாம்.
தேசியத் தலைவர் பதவிக்கு பொருத்தமானவராக, ஒருவர் அடையாளம் காணப்பட்டால், தேசிய பொதுச்செயலர் போன்ற தேசிய பொறுப்பில் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது, அவரை பணியாற்ற வைத்தபின், தலைவராக அறிவிக்கலாம். அப்போது தான், அவருக்கும் அனுபவம் கிடைக்கும்.
இந்த நடைமுறை தான், பா.ஜ.,வில் இருந்து வந்தது. தேசிய பொதுச்செயலராகி, உ.பி., தேர்தலில் வெற்றியை தந்த பின் தான், அமித் ஷா தலைவரானார். நட்டா நீண்ட காலம் தேசிய பொறுப்பில் இருந்தவர். தலைவராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி கூட, நீண்ட காலம் தேசிய துணைத் தலைவராக இருந்தவர்.
கடந்த 2009 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததும், கட்சியை சீரமைக்க, புதியவர் ஒருவரை தேசியத் தலைவராக்க முடிவு செய்து, மஹாராஷ்டிர மாநில பா.ஜ., தலைவராக இருந்த நிதின் கட்கரி, தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, கட்சிக்குள் நீண்ட விவாதம் நடத்தப்பட்டு, அவரது பெயர் இறுதி செய்யப்பட்டது.
இப்போது, பீஹார் அமைச்சராக இருந்த நிதின் நபின், திடீரென தலைவராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு தேசிய அரசியலில் அனுபவம் இல்லை. கட்சிக்காக உழைத்த திறனுள்ள பல தலைவர்கள் இருக்கின்றனர்; அவர்களில் ஒருவரை தலைவர் பதவிக்கு பரிசீலித்திருக்கலாம்.
நிதின் நபின் தான் வேண்டும் என்றால், 2024 லோக்சபா தேர்தல் முடிந்த உடனேயே, அவரை தேசிய பொதுச் செயலராக நியமித்திருக்கலாம்.
இப்படி ஒருசிலர் மட்டும் முடிவு செய்து, தேசியத் தலைவரை அறிவிப்பதால், கட்சிக்காக உழைப்பவர்கள், என்ன உழைத்தாலும் பலனில்லை என நம்பிக்கை இழக்கின்றனர். இதை வெளியே சொல்ல முடியாமல், உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்; இது, கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

