கால்வாய் ஆக்கிரமிப்பு: அழகிரி சம்மனை திரும்ப பெறுவதாக அரசு தரப்பு தகவல்
கால்வாய் ஆக்கிரமிப்பு: அழகிரி சம்மனை திரும்ப பெறுவதாக அரசு தரப்பு தகவல்
ADDED : செப் 16, 2011 11:11 PM

மதுரை: மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை அருகே, தயா இன்ஜினியரிங் கல்லூரிக்காக, நீர்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்தது குறித்து விளக்கமளிக்க, மத்திய அமைச்சர் அழகிரிக்கு அனுப்பிய சம்மனை திரும்பப் பெறுவதாக, மதுரை ஐகோர்ட் கிளையில், அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புதிய சம்மன் அனுப்ப, அரசுத் தரப்புக்கு ஐகோர்ட் கிளை அனுமதித்தது. மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான, தயா இன்ஜினியரிங் கல்லூரிக்காக, கரிசல்குளம் கண்மாய் மடை மற்றும் நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாக, விவசாயிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் கலெக்டர் சகாயத்திடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து விளக்கமளிக்க, செப்., 16ல் நேரில் ஆஜராகும்படி, அழகிரி, அவரது மனைவி காந்தி, மகன் தயாநிதிக்கு, கலெக்டர் சம்மன் அனுப்பினார். சம்மனை ரத்து செய்யக் கோரி, அழகிரி ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். அதை விசாரித்த ஐகோர்ட் கிளை, சம்மனில் தேவையில்லாத தகவல்களை கலெக்டர் தெரிவித்துள்ளதாக, நேற்று முன் தினம் தெரிவித்தது. செப்.,16ல் கலெக்டர் விசாரிக்கக் கூடாது என உத்தரவிட்டது. இதுகுறித்து, கலெக்டரிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக, அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதையடுத்து, நேற்றைக்கு வழக்கை தள்ளிவைத்தது. நேற்று, மனு நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வீர.கதிரவன் ஆஜரானார். அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், ''சம்மனில் தேவையற்ற கருத்துக்களை நீக்கி விட்டு சம்மனாக கருதலாம்'' என்றார்.
சம்மனை வாபஸ் பெற்றுத் திரும்ப அனுப்புவது குறித்து, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதையடுத்து அனுப்பப்பட்ட சம்மனை திரும்ப பெறுவதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். அதைப் பதிவு செய்து கொண்டு, ரிட் மனுவை நீதிபதிகள் முடிவுக்குக் கொண்டு வந்தனர். சட்டத்திற்கு உட்பட்டு, புதிய சம்மன் அனுப்ப கலெக்டருக்கு அனுமதி வழங்கியும் உத்தரவிட்டனர்.