ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்
ADDED : நவ 14, 2025 06:50 AM

சென்னை: கமல் தயாரிப்பில், ரஜினி நடிக்கும் படத்திலிருந்து விலகுவதாக, சினிமா இயக்குனர் சுந்தர் சி அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினியின் 173வது திரைப்படத்தை, நடிகர் கமலின், 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை, பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. திரையுலகில் 44 ஆண்டுகளுக்கு பின், ரஜினியும், கமலும் இணைந்து பணியாற்ற இருப்பது, தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
ரஜினி நடிக்கும் படத்தின் பெயர், கதாநாயகி உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், ரஜினி படத்திலிருந்து விலகுவதாக, சுந்தர் சி திடீரென அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
எதிர்பாராத, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், கனத்த இதயத்துடன், ரஜினியின் 'தலைவர் 173' படத்திலிருந்து விலகிக் கொள்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். ரஜினி நடிக்க, கமல் தயாரிப்பில் உருவாகவிருந்த இந்த படத்தில் இணைவது, எனக்கு உண்மையிலேயே ஒரு கனவு, நனவாகும் வாய்ப்பாக இருந்தது.
வாழ்வில் சில தருணங்களில், நமது கனவுகளிலிருந்து விலகி சென்றாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை பின்பற்ற வேண்டிய சூழல் வரும். ஜாம்பவான்களான ரஜினி, கமல் உடனான எனது தொடர்பு, நீண்ட காலத்திற்கு முன்பே துவங்கியது. இந்த படத்திலிருந்து விலகினாலும், அவர்களின் நிபுணத்துவ ஆலோசனையை தொடர்ந்து நாடுவேன். இந்த மாபெரும் படைப்புக்காக, என்னை கருத்தில் கொண்டதற்கு, இருவருக்கும் என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

