மின் கணக்கீட்டில் தவறு என்றால் மேற்பார்வை பொறியாளர்களே பொறுப்பு: மின் வாரியம் எச்சரிக்கை
மின் கணக்கீட்டில் தவறு என்றால் மேற்பார்வை பொறியாளர்களே பொறுப்பு: மின் வாரியம் எச்சரிக்கை
ADDED : செப் 01, 2026 06:39 PM

சென்னை: மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில், இனி தவறு ஏற்பட்டால், மேற்பார்வை பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என மின் வாரியம் எச்சரித்துள்ளது.
கடந்த ஜூன், ஜூலையில் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டதில், வழக்கத்தை விட, அதிக மின் கட்டணம் வந்ததாக பலர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக மின் வாரியம் ஆய்வு செய்ததில், 9.60 லட்சம் வீடுகளில் அதிக மின் கட்டணம் வந்ததும், அதில், 3.70 லட்சம் வீடுகளில் மூன்று மடங்கிற்கு மேல் கட்டணம் வந்ததும் தெரிய வந்தது.
அந்த இணைப்புகளில் மறுஆய்வு செய்ய, அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. இதில், 2,000 வீடுகளில் தவறாக கணக்கு எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந் நிலையில், 'மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில், இனி தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும்' என, மின் வாரியம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் பயன்பாடு கணக்கெடுப்பில் நேரில் செல்லாமல், கணக்கு எடுக்க கூடாது என, கணக்கீட்டாளர்களை அறிவுறுத்துமாறு, மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரிய தலைவர் அருண்ராய் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மின் இணைப்புகளுக்கும் நேரில் சென்று மீட்டரை பார்த்து, மின் பயன்பாட்டை கணக்கெடுக்க வேண்டும். கடந்த முறையை விட, மின் பயன்பாடு கணிசமாக அதிகமாக இருந்தால், உடனே உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
கடந்த மார்ச் - மே மாதங்களில், இதுபோன்ற தவறான நடைமுறைகளால், மின் வாரியத்திற்கு தேவையில்லாமல் கெட்ட பெயர் ஏற்பட்டது. இனி தவறு நேர்ந்தால், மேற்பார்வை பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும், வாரிய தலைவரால் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
மேலும், பிழைகளை தவிர்க்க, 100 சதவீதம் தானியங்கி முறையில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
