ADDED : ஜன 07, 2025 07:44 AM

சென்னை : பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலையில், மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில், கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், 37, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்ட போது, தப்பிக்க முயன்று கீழே விழுந்ததில், இடது கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், எலும்பு முறிவுக்கு மாவுக்கட்டு போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர் மருத்துவ சிகிச்சையில், அவர் உள்ள நிலையில், அவருக்கு எலும்பு முறிவை சரி செய்ய, அறுவை சிகிச்சை வழியாக உலோக உபகரணங்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது:
ஞானசேகரனுக்கு ஏற்பட்ட எலும்பு முறிவை, மாவுக்கட்டு சிகிச்சையில் குணப்படுத்த முடியாத நிலை இருந்தது.
அதனால், அறுவை சிகிச்சை வாயிலாக, உலோகங்கள் பொருத்தி, பாதிக்கப்பட்ட எலும்புகள் இணைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை விபரங்கள் புழல் சிறை நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில் நிலத்தில் வீடு
மாணவி பாலியல் வன்முறை வழக்கை விசாரித்து வரும், மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய, சிறப்பு புலனாய்வு குழு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, ஞானசேகரன் வீட்டில், கடந்த சனிக்கிழமை சோதனை செய்தனர்.
அப்போது, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, சொத்து ஆவணங்கள், கத்தி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். சொத்து ஆவணங்களை, வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஞானசேகரன் கோட்டூர்புரம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தைஆக்கிரமித்து, வீடு கட்டி இருப்பது தெரிய வந்தது.

