ADDED : ஜூலை 09, 2026 12:44 AM
-- நமது நிருபர் -: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே அரசு நெல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
தென்காசி மாவட்ட அரசு அதிகாரிகள் கூறியதாவது:
ஆலங்குளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உணவு சேமிப்பு கிடங்கில் போதிய இடம் இல்லை. இதனால், சில ஆண்டுகளுக்கு முன், வெங்கடாம்பட்டி, ஐந்தாங்கட்டளை ஊராட்சிகளுக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலமான 'பறம்பு' பகுதிகளில், தற்காலிக சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டது.
இதன் அருகே, தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்படுகிறது. கடந்த ஆண்டு அங்கு பாறைகளுக்கு வைக்கப்பட்ட வெடியால், சிதறிய கற்கள் பட்டு டிரைவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதை அதிகாரிகள் வெளியே தெரியாமல் மறைத்தனர். 'நெல் கிடங்கு அந்த இடத்தில் இருப்பதால், அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு வருகின்றனர்.
இதனால், குவாரிகள் இயங்க முடியவில்லை; கிடங்கை அகற்ற வேண்டும்' என, குவாரி உரிமையாளர்கள், கனிம வளத்துறை அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினர்.
சேமிப்பு கிடங்கு இருக்கும் பகுதிகளில் மான், மிளா, காட்டு பன்றி போன்ற வனவிலங்குகள் வசிக்கின்றன. கிடங்கு, குவாரிகள், துணை மின் நிலையம் என தொடர்ச்சியாக பறம்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப் படுவதால், வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்துவிடுகின்றன. எனவே, அந்த பகுதியை, பாதுகாக்கப்பட்ட பகுதியாக வனத்துறை அறிவிக்க வேண்டும் என, ஊர் பொதுமக்கள், கலெக்டருக்கு மனு அளித்தனர்.
ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை.
இந்நிலையில் தான், சேமிப்பு கிடங்கில் தீ பற்றி உள்ளது.
இது இயற்கையாக நடந்தது போல தெரியவில்லை. அதேபோல், தீ பற்றிய பல மணி நேரத்துக்கு, உயர் அதிகாரிகள் யாருமே அங்கு செல்லவில்லை. இந்த தீ விபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தினால், பல உண்மைகள் வெளியே வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
