ADDED : ஜூலை 13, 2011 12:56 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், சேதமடைந்த சுவாமி சிலைகள் மற்றும் தங்கம், வெள்ளியினாலான வாகனங்கள் பளபளக்க துவங்கி உள்ளன.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சேதமடைந்த சுவாமி சிலைகள், அரித்துப்போய் காணப்பட்ட தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட வாகனங்கள், தேர்கள் போன்றவை சீரமைக்கப்படாமல் இருந்தன. சேவார்த்திகள் சிலர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவற்றை சீர்செய்வதற்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு, கோவில் சுவாமி சன்னிதியில் இருந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஐம்பொன் சிலைகளை மெருகூட்டும் பணி நடந்தது.
இதன் தொடர்ச்சியாக, கோவிலில் உள்ள சுவாமி, அம்பாள் உலா செல்லும் தங்கம் மற்றும் வெள்ளி வாகனங்கள், கேடயங்களை செப்பனிட்டு பாலிஷ் செய்யும் பணி நேற்று துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தங்க கேடயம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி யானை, வெள்ளி கேடயம் உள்ளிட்ட வாகனங்களை, இயற்கை மருந்துகளால் பாலிஷ் செய்து மெருகேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது வாகனங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. கோவில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம், அறநிலையத்துறை துணை கமிஷனர் மற்றும் நகை சரிபார்ப்பு அதிகாரி அன்புமணி, உதவி கோட்டப் பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் முன்னிலையில் நடந்து வரும் இப்பணிகளை தொடர்ந்து தங்கம், வெள்ளி ரதங்கள் மெருகேற்றும் பணியும் சில தினங்களில் துவங்க உள்ளது.