ஓரிரு நாளில் இனிப்பான செய்தி வரும்: கூட்டணி பற்றி காங்., தலைவர் தகவல்
ஓரிரு நாளில் இனிப்பான செய்தி வரும்: கூட்டணி பற்றி காங்., தலைவர் தகவல்
ADDED : மார் 07, 2024 11:56 AM

சென்னை: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில் இனிப்பான செய்தி வரும் என தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் இன்னும் தொகுதி பங்கீடை உறுதி செய்யவில்லை. அது தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை கூறியதாவது: திமுக கூட்டணியில் மாநில கட்சிகளே இன்னும் தொகுதி பங்கீடு பற்றி பேசி முடிக்கவில்லை. நாங்கள் தேசிய கட்சி என்பதால் பொறுமையாக இருக்கிறோம். ஓரிரு நாட்களில் இனிப்பான செய்தி வரும்.
திமுக கூட்டணியில் எந்தவித பிரச்னையும் இல்லை; சுமூகமாக இருக்கிறது. வதந்திகளை நம்பாதீர்கள். காங்கிரசில் இருந்தபோது விஜயதரணிக்கு உரிய மரியாதை அளித்து, அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. தற்போது பா.ஜ.,வில் இணைந்துள்ள அவருக்கு அந்த அங்கீகாரம் எல்லாம் கிடைக்குமா என பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

