ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
ADDED : நவ 18, 2025 09:15 PM

திருப்பத்துார் : ஈமச்சடங்கு பணம் வழங்க, 2,000 ரூபாய் லஞ்ச பெற்ற தனி தாசில்தாரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளியை சேர்ந்தவர் மலர், 60. இவர், ஒரு மாதத்திற்கு முன், வயது முதிர்வு காரணமாக இறந்தார். இயற்கை மரணம் அடைந்த நபருக்கு, ஈமச்சடங்கு செலவிற்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 25,000 ரூபாய் பெறுவதற்கு, மலரின் மகன் சேகர், 40, நாட்றம்பள்ளி தனி தாசில்தார் வள்ளியம்மாளை அணுகினார். அதற்கு அவர், 3,000 ரூபாய் லஞ்சமாக கேட்டார். இது குறித்து திருப்பத்துார் லஞ்ச ஒழிப்பு போலீசில் சேகர் புகார் செய்தார்.
இன்று(நவ.,18), நாட்றம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில், தனி தாசில்தார் வள்ளியம்மாளிடம், சேகர், 2,000 ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்தார். அதை அவர் பெற்றபோது, மறைந்திருந்த போலீசார், வள்ளியம்மாளை கைது செய்தனர்.

