ADDED : ஜூன் 03, 2026 12:46 AM

சென்னை: தெற்கு ரயில்வேயின், முதன்மை தலைமை வணிக மேலாளராக, ஆர்.செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்றார்.
இவர், ரயில்வேயில் கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக, பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகிறார். ரயில்வேயில் வணிக மேலாண்மை மற்றும் பாதுகாப்பு பிரிவுகளில், அவரது பங்களிப்பு முக்கியமானது.
கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ், ஏழு ஆண்டுகள் அயல் பணி அடிப்படையில் பணியாற்றினார். அங்கு பொது மேலாளர் உள்ளிட்ட பதவியில் இருந்தபோது, கடல்சார் துறையின் திட்டமிடல் மற்றும் சிறப்பான பணிகளை செய்துள்ளார். இவரது பணியை பாராட்டி, ரயில்வே அமைச்சரின், சிறந்த சேவைக்கான தேசிய விருது உட்பட, பல விருதுகளை பெற்றுள்ளார்.
தெற்கு ரயில்வேயில், தலைமை வணிக மேலாளராகப் பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று, தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
