ADDED : மார் 12, 2024 03:44 AM

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சட்டசபை பா.ஜ., குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேற்று காலை, பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளை தேர்வு செய்தனர்.
ச.ம.க., தலைவர் சரத்குமார், த.ம.மு.க., தலைவர் ஜான்பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோர், கமலாலயத்தில் பா.ஜ., குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பா.ஜ., குழுவினருடன் பேச்சு நடத்தினர்.
கிஷன் ரெட்டி, அரவிந்த் மேனன், தமிழக பா.ஜ., துணை தலைவர் கரு.நாகரஜன் ஆகியோர், த.மா.கா., தலைவர் வாசனை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.
கமலாலயத்தில் பாரிவேந்தர் அளித்த பேட்டி:
நாங்கள் கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் என, இரு தொகுதிகளை கேட்டோம். தற்போதைக்கு பெரம்பலுார் தொகுதியை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். நான் பெரம்பலுார் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். தாமரை சின்னத்தில் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

