'தமிழுக்கு உளறல் தெரியாது ஏனெனில் அது தெய்வமொழி'
'தமிழுக்கு உளறல் தெரியாது ஏனெனில் அது தெய்வமொழி'
ADDED : ஜன 31, 2026 03:24 AM

சென்னை: ''தமிழுக்கு உளறல் தெரியாது. ஏனெனில், அது தெய்வ மொழி. அதிலுள்ள வளங்களை கற்க இந்த தமிழ் ஏ.ஐ., உருவாக்கப்பட்டுள்ளது,'' என, 'போனெமிக் இன்டெலிஜென்ட்ஸ்' கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் பாஸ்கரன் பிள்ளை தெரிவித்தார்.
பாஸ்கரன் பிள்ளை உருவாக்கிய, 'தமிழ் சூப்பர் இன்டெலிஜென்ட்ஸ்' என்ற, தமிழ் ஏ.ஐ., அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
தற்போது உள்ள செயற்கை நுண்ணறிவு உலகில், அனைவரும் தங்களுக்கு பேரறிவு வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், அதற்கான தீர்வை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு இன்னும், 10 ஆண்டுகளாகும் என்கின்றனர்.
ஆனால், அந்த பேரறிவு தமிழ் மொழியில் உள்ளது. இதை விஞ்ஞான ரீதியாகவும், சித்தாந்த அடிப்படையிலும் நிரூபிக்க வேண்டும்.
தமிழ், சிவபெருமான் கொடுத்த மொழி என்று கூறலாம். அதை அறிவியல் ஒப்புக்கொள்ளாது. ஆனால், ஒரு சமண முனிவர், 'அணுத்திறள்களின் ஒலியில் இருந்து, தமிழ் மொழி உருவானது' என்கிறார். அதேபோல, தமிழுக்கு உளறல் தெரியாது.
ஏனெனில், அது தெய்வ மொழி. அதிலுள்ள வளங்களை கற்க இந்த தமிழ் ஏ.ஐ., உருவாக்கப்பட்டு உள்ளது.
இது, தமிழ் இலக்கண, இலக்கியங்களான தொல்காப்பியம், திருக்குறள், நன்னுால் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில், மேலும் பல இலக்கியங்கள் சேர்க்கப்பட உள்ளன.
ஒரு அணு அல்லது அணுசக்தி அளவிற்கு, அறிவு பெறுவதற்கான வளம் தமிழ் மொழியில் உள்ளது. தமிழ் ஏ.ஐ.,யில் சொற்களை பதிவிட்டால், அதற்கான பொருளை உற்பத்தி செய்யும். 'எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே' என, தொல்காப்பியர் கூறுகிறார்.
தமிழ் சொற்களில் இருந்து அணுசக்தி வெளிப்படுகிறது. தமிழை அனைவரும் படிக்க வேண்டும். சாட் ஜி.பி.டி., போல், தமிழ் ஏ.ஐ., செயல்படும். தமிழ் ஏ.ஐ., படித்தால் பேரறிவு வரும். இதன் வாயிலாக உலகம் முழுதும் தமிழ் பரவும். தமிழகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும்.
இந்த தமிழ் ஏ.ஐ.,யில், எழுத்தொலி அறிவியல் முறை, திருக்குறள் முழு அறிவுப் பயணம், சித்தர் சக்திகள் மற்றும் மனவள மேம்பாடு, தமிழ் மற்றும் அறிவியல் ஒருங்கிணைப்பு, உலகளாவிய தமிழ் தாக்கம் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன.
அனைவரும் இதை இலவசமாக பயன்படுத்தலாம். தற்போது, இணையதள முறையில் மட்டுமே வெளியாகிறது. விரைவில், மொபைல் செயலியாக வெளியாகும். https://www.perarivu.ai/ என்ற இணையதளத்தில் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார்.

