திமுக ரவுடிகள் தாக்கினர்; தமிழக பாஜ இளைஞரணி தலைவர் குற்றச்சாட்டு
திமுக ரவுடிகள் தாக்கினர்; தமிழக பாஜ இளைஞரணி தலைவர் குற்றச்சாட்டு
UPDATED : ஜன 11, 2026 07:35 AM
ADDED : ஜன 11, 2026 01:40 AM

சென்னை: தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் சூர்யா, 34, மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அக்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவராக சூர்யா உள்ளார். இவர், சென்னை எழும்பூரில் தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில், நேற்று முன்தினம் இரவு பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து வெளியே செல்லும்போது, அவரையும் அவருடன் வந்திருந்த கட்சியினரையும் சிலர் தாக்கியுள்ளனர். அவர்களுக்கு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொங்கல் பரிசு
நேற்று காலை, திருவான்மியூரில் உள்ள தன் வீட்டிற்கு திரும்பிய சூர்யாவை, தமிழக பா.ஜ., செயலர் கராத்தே தியாகராஜன் நலம் விசாரித்தார். தாக்குதல் குறித்து சூர்யா கூறியதாவது: விவாத நிகழ்ச்சியில் நான் பேசும்போது, 'இந்தாண்டு தேர்தல் வருவதால், பொங்கல் பரிசாக, 3,000 ரூபாய் தருகின்றனர். 'கடந்த ஆண்டு பொங்கலுக்கு பணம் தரவில்லை. அதற்கு முன் லோக்சபா தேர்தல் வந்ததால், 1,000 ரூபாய் தந்தனர்.
' திட்டங்களால் தி.மு.க., வெற்றி பெற முடியாது. பணம் கொடுத்து வெற்றி பெறுகின்றனர்' என்று பேசினேன்.
அதற்கு, நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க., ஆதரவாளரும் யு டியூபருமான செந்தில்வேல் என்பவர், 'கடந்த ஆண்டு 1,000 ரூபாய் வழங்கப்பட்டது' என்றார். இதற்கு, அனைத்து பார்வையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர் கோபம் அடைந்தார். தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநிலத்தை சுட்டிக்காட்டி பேசினார்.
அதற்கு, கீழே அமர்ந்திருந்த ஒருவர், 'தமிழகத்திற்கு முதலில் வரவும்' என்றார். இதனால் கோபம் அடைந்த செந்தில்வேல், கூட்டத்தை பார்த்து அசிங்கமாக பேசினார். கூட்டத்தில் இருந்து புறக்கணிப்பதாக வெளியேறி விட்டார். வெளியில் சென்ற அவர், அமைச்சர் சேகர்பாபுவிடம் சொல்லி, 100க்கும் மேற்பட்ட தி.மு.க., ரவுடிகளை வரவழைத்து, நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்ற என்னையும் என்னுடன் வந்த பா.ஜ.,வினரையும் தாக்கினர்.
கோரமுகம்
அவர்கள் சோடா பாட்டில், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர். விவாத நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.பி., தங்க தமிழ்செல்வனும் பங்கேற்றார். அவர் சொல்லியும் தி.மு.க.,வினர் கேட்கவில்லை. தெரு விளக்கை அணைத்துவிட்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
போலீசார் எங்களை மீட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இச்சம்பவத்தை, தமிழக பா.ஜ., தலைவர்களும், அ.தி.மு.க., - எம்.பி.,யும் கடுமையாக கண்டித்துள்ளனர். அதன் விபரம்:
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்:
சூர்யா மீதும் பா.ஜ., இளைஞர் அணி நிர்வாகிகள் மீதும் தி.மு.க., ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளது, கடும் கண்டனத்திற்கு உரியது. கடந்த நான்கரை ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சியின் கோரமுகத்தை கண்ட தமிழக மக்களின் கடுங்கோபத்தை பார்த்து பயம் தொற்றி கொண்ட தால், இதுபோன்ற வன்முறையை தி.மு.க.,வினர் கையில் எடுத்துள்ளனர்.
விவாதங்களில் மக்கள் பிரதிநிதியாக கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு கூட, வன்முறையை பதிலாக அளிப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு சமம். முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை, இந்த தாக்குதலுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை:
விவாதத்தில் ஆதாரங்களை வைத்து கொண்டு, தி.மு.க.,வை சூர்யா விமர்சித்தபோது, அக்கட்சியின் ரவுடிகள் ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர்.
அதிர்ச்சியூட்டும் விதமாக, தாக்குதல் நடத்திய வர்களுக்கு உதவுவதற்காக, தெரு விளக்குகள் வேண்டுமென்றே அணைக்கப்பட்டன. தி.மு.க., ஆட்சியின் கீழ், தமிழகத்தில் குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதில், தி.மு.க., ரவுடிகளை பாதுகாக்க காவல் துறை வேலை செய்கிறது.
அ.தி.மு.க., எம்.பி., இன்பதுரை
சென்னையில நடந்த தனியார் செய்தி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ., மாநில இளைஞரணி தலைவர் சூர்யா மீது, தி.மு.க.,வினர் நடத்திய தாக்குதல் உச்சகட்ட கோழைத்தனம். இது, விமர்சனங்களை கண்டு அஞ்சும் தி.மு.க., அரசால், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

