கருணாநிதி பெருமைப்படுத்தி எழுதிய செங்கோலை சிறுமைப்படுத்தி பேசிய தமிழக கம்யூ., எம்.பி.,
கருணாநிதி பெருமைப்படுத்தி எழுதிய செங்கோலை சிறுமைப்படுத்தி பேசிய தமிழக கம்யூ., எம்.பி.,
UPDATED : ஜூலை 03, 2024 11:59 AM
ADDED : ஜூலை 02, 2024 01:57 PM

சென்னை: திருக்குறள் ஒன்றிற்கு விளக்க உரை எழுதிய மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, செங்கோலை பெருமைப்படுத்தி எழுதியிருந்தார். ஆனால், திமுக கூட்டணியில் இடம்பெற்று, மதுரை தொகுதியில் வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன், லோக்சபாவில் கருணாநிதியின் விளக்கத்திற்கு மாறாக செங்கோலை பற்றியும், பெண்களை இழிவுப்படுத்தியும் பேசியிருக்கிறார். இது கூட்டணிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோல்
ஹிந்து மதத்திற்கு எதிராக பேசுவது திமுக தலைவர்களுக்கும், கம்யூனிஸ்ட்வாதிகளுக்கும் வழக்கமாக போய்விட்டது. லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமிழகத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., சு.வெங்கடேசன் பேசுகையில், ''மன்னராட்சி ஒழிந்தபோதே செங்கோலின் மகிமையும் ஒழிந்து விட்டது. இந்த செங்கோலை கையில் வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தபுரத்தில் எத்தனை நூறு பெண்களை அடிமையாக வைத்திருந்தான் தெரியுமா?
இந்த செங்கோலை கொண்டுவந்து இந்த இடத்தில் (லோக்சபாவில்) வைத்ததன் மூலம், இந்த நாட்டு பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் திரள்கிறார்கள். இவர்கள் அனைவருமே ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்கள். 800 முதல் 1200 ஆண்டுகளாக மக்கள் இப்படிதான் இருக்கிறார்கள். ஆனால், தேர்தல் என வந்துவிட்டால், ஹிந்து மதத்திற்கு எதிராக பேசும் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளிக்கின்றனர்.
செங்கோலை வைத்து பெண்களுக்கு எதிராக ஹிந்து மதம் இருப்பதுபோல பார்லிமென்டில் பேசும் மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன், எத்தனை திராவிட தலைவர்களை தனது தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்?
திராவிட தலைவர்கள் எத்தனை திருமணங்களை செய்துள்ளனர் என்று வெளிப்படையாக விமர்சிக்க இந்த கம்யூனிஸ்ட் எம்.பி.,க்கு 'தில்' இருக்கிறதா? இந்திய சட்டப்படி அதிகாரப்பூர்வமாக 2வது திருமணம் செய்வது தவறு என்று இவரால் வெளிப்படையாக கூற முடியுமா?
குறள் - விளக்கம்
![]() |
ஹிந்துமத விரோத கருத்துக்களை அள்ளித்தெளிப்பதை கைவந்த கலையாக கொண்ட மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கூட, செங்கோலை உயர்வாக தான் கூறியுள்ளார்.
'வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்'
- என்ற திருக்குறள் எண் 546க்கு கருணாநிதி எழுதிய விளக்க உரையில், 'ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்' எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, 'அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல' என்பதில் முருகன் கையில் இருக்கும் வேலை குறிப்பிடுகிறார். அதே குறளுக்கான விளக்கத்தில் 'குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியென்றால் மக்களுக்கு நீதி தருவது செங்கோல் என கருணாநிதி விளக்கியுள்ளார். திருக்குறளுக்கு விளக்க உரை எழுதும்போது, கருணாநிதியால் பெருமையாக சொல்லப்பட்ட செங்கோல் பற்றி, கூட்டணி கட்சி எம்.பி., தவறாக பேசியது கூட்டணிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டிப்பார்களா
தங்கள் கூட்டணியின் முக்கிய கட்சி (திமுக) தலைவர் கருத்துக்கு எதிரான கருத்து தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சி பற்றி திமுக தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். கம்யூ., எம்பியின் கருத்துக்கு திமுக பதில் சொல்லவில்லை என்றால், அக்கருத்தை திமுக ஏற்றுக்கொண்டதாக அர்த்தம்.
அவ்வாறு ஏற்றுக்கொள்ளாவிட்டால் கம்யூ., எம்பிக்கு எதிராக திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பார்களா.
செங்கோல் பற்றியும் ஹிந்து மன்னர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்த கம்யூ., எம்பி., முகலாய மன்னர்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பாரா. அதற்கு துணிச்சல் உண்டா. ஹிந்துக்கள் பற்றி என்ன வேண்டுமானாலும் கூறலாம். யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியம் தானே இதற்கு காரணம்.
கம்யூ., எம்பியின் கருத்து பாஜ கட்சியினர் இடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களும் எம்பிக்கு கண்டனம் தெரிவிக்க துவங்கி உள்ளனர்.