ADDED : ஆக 28, 2011 07:06 PM
தேனி:மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து,செப்.,13ல் மாவட்ட தலைநகரங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் தேனியில் நடந்தது. மாநில துணை தலைவர் முகமதலி தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் சண்முகம், பொருளாளர் நாகப்பன், லாசர் எம்.எல்.ஏ., உட்பட பலர் பேசினர். மாவட்ட செயலாளர் சுருளிநாதன் வரவேற்றார்.மத்திய குழு முடிவுகளை விளக்கி, அகில இந்திய பொது செயலாளர் கே.வரதராசன் பேசினார்.அவர் கூறியதாவது: மத்திய அரசின் விவசாய கொள்கைகள், ஏழை விவசாயிகளை பாதித்துள்ளது. இதுவரை 2 லட்சத்து ஏழாயிரம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துள்ளனர். ஒரு நாளைக்கு 50 பேர் தற்கொலை செய்கின்றனர். பட்டு இறக்குமதிக்கு வரியை ஐந்து சதவீதமாக குறைத்ததால் பட்டு விவசாயிகள் நெருக்கடியில் உள்ளனர். சர்க்கரை இறக்குமதியால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பால் மற்றும் பால்பொருட்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.மத்திய அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து, தமிழகத்தில் செப்.,13ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.