தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: பிரதமர் மோடி தலையிட முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: பிரதமர் மோடி தலையிட முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
ADDED : பிப் 18, 2024 04:11 PM

சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில், பிரதமர் மோடி ராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்தும், படகுகளை இலங்கை அரசு நாட்டுடமையாக்குவதை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் படகுகளில் கறுப்புக் கொடியை கட்டி 700க்கும் மேற்பட்ட மீனவரகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த செய்தியை மேற்கொள் காட்டி எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில், பிரதமர் மோடி ராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும். 3 மீனவர்கள் அநியாயமாக நீண்ட காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது கவலை அளிக்கிறது. தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவதை பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்ய வேண்டும். மீனவர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம். ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.