பாக்., சிறையில் தமிழக மீனவர்கள்: மீட்க மத்திய அரசு நடவடிக்கை
பாக்., சிறையில் தமிழக மீனவர்கள்: மீட்க மத்திய அரசு நடவடிக்கை
ADDED : டிச 13, 2024 03:51 AM

சென்னை : பாகிஸ்தான் சிறையில் உள்ள ஏழு தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர், 20ல் முதல்வர் ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்திற்கு பதில் அளித்து, ஜெய்சங்கர் அனுப்பியுள்ள கடிதம்:
பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும், அவர்களின் இரண்டு படகுகளையும் விடுவிக்க, அந்நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். மீனவர்களுக்கு துாதரக அனுமதி கேட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாகிஸ்தான் அதிகாரிகள் அதை வழங்கவில்லை.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துாதரகம் வாயிலாக, மீனவர்களுக்கு துாதரக அனுமதி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை, அவர்களது பாதுகாப்பு மற்றும் உடல் நலனை உறுதி செய்ய வேண்டும் எனவும், பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இந்திய துாதரகம் தொடர்ந்து கண்காணித்து, மீனவர்களை விடுவிப்பதற்கும், தாயகம் அழைத்து வருவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.