தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சலுகை மழை 9 அறிவிப்புகள்:
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சலுகை மழை 9 அறிவிப்புகள்:
UPDATED : ஏப் 28, 2025 11:56 PM
ADDED : ஏப் 28, 2025 11:13 PM

சென்னை,: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று சலுகைகளை வாரி வழங்கினார். கடந்த ஜனவரி 1 முதல், அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்; திருமண முன்பணம் 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உட்பட ஒன்பது அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:
நிர்வாகத்தின் துாண்களாகவும், அரசின் கரங்களாகவும் விளங்குவோர் அரசு ஊழியர்கள்.
அகில இந்திய அளவில் தமிழகம் பல வகையில் முதலிடத்திலும், முன்னோடி மாநிலமாகவும் திகழ்கிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரின் உழைப்பும், சீரிய பங்களிப்பும், இதற்கு மிக முக்கிய காரணம்.
அரசு ஊழியர்கள் நலன் கருதி, ஒன்பது அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 2026 ஏப்., 1 முதல் 15 நாட்கள் வரை சரண் செய்து, பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்த, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், இந்த ஆண்டே அந்த அறிவிப்பை செயல்படுத்த கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்று, ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை, அக்., 1 முதல் சரண் செய்து பணப்பலன் பெறலாம். இதை செயல்படுத்த ஆண்டுக்கு, 3,561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநில அரசு பணியாளர்களுக்கும் கடந்த ஜன., 1 முதல், அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். இதனால், 16 லட்சம் பேர் பயன் பெறுவர். ஆண்டுக்கு கூடுதலாக 1,252 கோடி ரூபாய் செலவிடப்படும்
அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் 10,000 ரூபாய் என்பது 20,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதனால், ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன் பெறுவர்
அரசு பணியாளர்களுக்கான கல்வி முன்பணம், தொழிற்கல்வி பயில 1 லட்சம் ரூபாய்; கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிக்க 50,000 ரூபாய் என உயர்த்தப்படும்
திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு 10,000 ரூபாய்; ஆண்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டது. இது, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்
முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட, 'சி' மற்றும் 'டி' பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை, 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதனால், 4.71 லட்சம் பேர் பயன் பெறுவர்; அரசுக்கு கூடுதலாக 24 கோடி ரூபாய் செலவாகும்
ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை கால முன்பணம், 4,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதனால், 52,000 பேர் பயன் பெறுவர்; கூடுதலாக 10 கோடி ரூபாய் செலவு ஏற்படும்
ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய குழு அமைத்து, ஒன்பது மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கை அடிப்படையில், அந்த குழு தன் அறிக்கை மற்றும் பரிந்துரையை, வரும் செப்., 30க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படும்
திருமணமான அரசு பெண் ஊழியர்களுக்கு ஒன்பது மாதமாக இருந்த மகப்பேறு விடுப்பு, 2021 ஜூலை 1 முதல் ஓராண்டாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது.
தற்போதுள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம், தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
இதன் காரணமாக, அரசு பணிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர், மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவத்தை உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல், பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. பணி மூப்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, இனி வரும் காலங்களில், அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை, அவர்களின் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.