நிவாரணத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
நிவாரணத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
UPDATED : டிச 03, 2024 09:15 PM
ADDED : டிச 03, 2024 05:38 PM

சென்னை: '' வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும், '' என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.68 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால் 3 மாவட்ட மக்களை ஸ்டாலின் அரசு கடும் துயரத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்த போதும், நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உடமைகள், கால்நடைகள் மற்றும் வாகனங்களை இழந்து உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் இருந்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளநீர் புகுந்தது. 3 மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர். குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கால்நடைகள், வாகனங்களை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு நெல் மற்றம் பயிர் சேதங்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.