'காலநிலையை சிறப்பாக கையாளும் மாநிலமாக தமிழகம் உருவாகணும்'
'காலநிலையை சிறப்பாக கையாளும் மாநிலமாக தமிழகம் உருவாகணும்'
ADDED : பிப் 29, 2024 12:55 AM

சென்னை:''காலநிலையை சிறப்பாக கையாளும் முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாக, அனைவரும் ஓரணியில் நின்று உழைக்க வேண்டும்,'' என, அமைச்சர் உதயநிதி பேசினார்.
தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு - 2.0, சென்னை கிண்டியில் நேற்று துவங்கியது. இரண்டு நாட்கள் மாநாட்டை, தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி துவங்கி வைத்து பேசியதாவது: சுற்றுச்சூழல் சிக்கலுக்கு தீர்வு காண, கடற்கரைகளுக்கான நீலக்கொடி நற்சான்றிதழ் திட்டம், திறன்மிகு கிராமங்கள், பசுமை புத்தாய்வு, பசுமை தொன்மங்கள், பசுமை பள்ளிகள் என, ஐந்து திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
காலநிலை மாற்ற சிக்கலுக்கு தீர்வு காண, நாட்டிற்கே வழிகாட்டும் வகையில், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தை உருவாக்கி, அதன் செயல்பாட்டிற்காக, 500 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.
தமிழகத்தில் 10 கிராமங்களை காலநிலை மீள்திறன் கொண்ட கிராமங்களாக மாற்றும் திட்டம்; நீலகிரி, கோவை, ராஜபாளையம், ராமேஸ்வரம் ஆகிய நகரங்களை, கார்பன் சமநிலை கொண்டவையாக மாற்றும் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தமிழகத்தின் பசுமை பரப்பை, 33 சதவீத்திற்கு மேல் அதிகரிக்க, பசுமைத் தமிழகம் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக, 7 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மீண்டும் மஞ்சள் பை இயக்க சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காலநிலையை சிறப்பாக கையாளும் முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாக, மக்கள், அரசியல் இயக்கங்கள், விவசாயிகள் என, அனைவரும் ஓரணியில் நின்று உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:
தமிழகத்தில் நீர் நிலைகளை மீட்டெடுக்கவும், கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கூவம் நதியை சீரமைக்க, 1,500 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
கொடுங்கையூர் குப்பை கிடங்கை மீட்க, 648 கோடி ரூபாயில் பணி நடக்கிறது. உலக வங்கியுடன் இணைந்து 1,675 கோடி ரூபாயில், கடல் பகுதிகளை மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

