வட மாவட்டங்களில் தமிழக சுற்றுலா திட்டம் மந்தம்: சிறப்பு திட்டங்களுடன் கர்நாடக அரசு அசத்தல்
வட மாவட்டங்களில் தமிழக சுற்றுலா திட்டம் மந்தம்: சிறப்பு திட்டங்களுடன் கர்நாடக அரசு அசத்தல்
ADDED : ஆக 31, 2025 03:17 AM

சென்னை: 'தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள பிரசி த்தி பெற்ற கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு கர்நாடக அரசு தரும் முக்கியத்துவத்தை, தமிழக சுற்றுலா துறை தராமல் புறக்கணித்து வருகிறது' என, சுற்றுலா ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா பயணியரை ஈர்க்க, 30 தொடர் சுற்றுலாக்கள், 22 பருவ கால சுற்றுலாக்கள் அமலில் உள்ளன.
சென்னையை மையப்படுத்தி இயக்கப்படும் இச்சுற்றுலாக்களில், 'ஏசி' பஸ் வாயிலாக, மாநிலத்தின் பிரபலமான இடங்களுக்கு பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர்.
தென் மாவட்டங்களில் உள்ள புகழ் பெற்ற கோவில்கள், சுற்றுலா மையங்கள், அரசின் திட்டங்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு, அரசு சுற்றுலா திட்டங்களில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இயற்கை அழகு நிறைந்த இடங்கள், பழமை வாய்ந்த கோவில்கள், அணைக்கட்டுகள் என, இம்மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலா பகுதிகள் இருந்தும், மாநில சுற்றுலாத்துறை அவற்றை புறக்கணித்து வருகிறது.
அதேநேரத்தில், அண்டை மாநிலமான கர்நாடக அரசு, தமிழகத்தின் வட மற்றும் மேற்கு மாவட்ட எல்லைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து, சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து, சுற்றுலா ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
கர்நாடகா அரசு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில், தங்கள் மாநில பக்தர்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் பயணம் மேற்கொள்ள, 'ஒரு நாள் கிருஷ்ணகிரி - கோல்டன் டெம்பிள், நேச்சர் ஹாலிடேஸ்' உள்ளிட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
ஆனால், தமிழக சுற்றுலா துறை, இம்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
தர்மபுரி காலபைரவர் கோவில், ஒகேனக்கல் நீருற்று; கிருஷ்ணகிரி கோட்டை, கே.ஆர்.பி., அணை; ஆம்பூர் - ஆஞ்சநேயர், நாகநாத சுவாமிகள் கோவில், வேலுார் தங்க கோவில் போன்றவற்றுக்கு, கர்நாடகாவில் இருந்து சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
எனவே, தமிழக அரசு இம்மாவட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.