தமிழக வெற்றிக்கழக மாநாடு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
தமிழக வெற்றிக்கழக மாநாடு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
UPDATED : அக் 27, 2024 08:35 AM
ADDED : அக் 27, 2024 06:15 AM

விக்கிரவாண்டி: இன்று நவக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டையொட்டி, விக்கிரவாண்டியில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் த.வெ.க., மாநில மாநாடு இன்று மாலை நடக்கிறது.
இடையூறு இன்றி
மாநாட்டிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வருவர் என, கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். இதையடுத்து, போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபெறும் மாநாட்டிற்கு வந்து செல்லும் வாகனங்கள் இடையூறு இன்றி பயணிக்க, இன்று பிற்பகல் 2:00 மணி முதல் போக்குவரத்தில் போலீசார் மாற்றம் செய்துள்ளனர்.
அதன்படி, மாநாட்டிற்கு வரும் பதிவு செய்துள்ள வாகனங்களைத் தவிர, சென்னையில் இருந்து திருச்சி மார்க்கம் செல்லும் பிற வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக விழுப்புரம் நோக்கிச் செல்ல வேண்டும்.
சென்னையில் இருந்து கும்பகோணம் மார்க்கம் செல்லும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து, புதுச்சேரி - கடலுார், வடலுார் வழியாகவும்; இலகுரக வாகனங்கள் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் இருந்து திருவக்கரை, திருக்கனுார், மதகடிப்பட்டு வழியாக விழுப்புரம் நோக்கிச் செல்ல வேண்டும்.
திருப்பி விடப்படும்
திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம் வழியாகவும், கும்பகோணம் மார்க்கத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் பண்ருட்டி, கடலுார், புதுச்சேரி, திண்டிவனம் வழியாக திருப்பி விடப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் கூறியதாவது:
பெரிய அளவிலான மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவே மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.