தமிழக இளைஞர்களுக்கு கேரளாவில் பயங்கரவாத பயிற்சி: சொல்கிறார் டாக்டர் ஹமீது உசேன்
தமிழக இளைஞர்களுக்கு கேரளாவில் பயங்கரவாத பயிற்சி: சொல்கிறார் டாக்டர் ஹமீது உசேன்
ADDED : ஆக 29, 2024 06:50 AM

சென்னை : 'தமிழக இளைஞர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று, பயங்கரவாத பயிற்சி அளித்தேன்' என, கைதான பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர் ஹமீது உசேன், அவரின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட ஆறு பேரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களை நேற்றுடன் ஏழு நாள் காவலில் எடுத்தும் விசாரித்துள்ளனர்.
என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம், டாக்டர் ஹமீது உசேன் அளித்துள்ள வாக்குமூலம்:
நான் நடத்தி வந்த, 'யு டியூப்' சேனல் வாயிலாக, கல்வி உதவி தொகை வழங்குவதாக, முஸ்லிம் இளைஞர்களுக்கு வலை விரித்தேன். அவர்களுக்கு, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது பற்றி வகுப்பு எடுத்தேன். வாரம் தோறும் ஞாயிறு அன்று, சென்னை மற்றும் கரூரில் ரகசிய பயிற்சி மையத்தில், பயங்கரவாதம் குறித்து வகுப்பு எடுத்தேன்.
சென்னை அண்ணா பல்கலையில் கவுரவ பேராசியராக பணியாற்றி உள்ளேன். அங்கு பயின்ற மாணவர்களை மூளைச் சலவை செய்தேன். வெளியூர்களுக்கு சென்றும், ரகசிய கூட்டம் நடத்தினேன்.
அப்போதுதான், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சிக்கினர். இருவரையும், தஞ்சாவூர், திருச்சி மாவட்ட நிர்வாகிகளாக நியமித்தேன். அவர்கள் கல்லுாரிகளுக்கு சென்றும், விடுதி மாணவர்களை குறி வைத்தும், பயங்கரவாத அமைப்பில் சேர்த்தனர். எங்களுக்கு கீழ், 50 பேர் திரண்டனர்.
அவர்களை ஐந்து முறை, 10 - 10 நபர்களாகப் பிரித்து, கேரளாவுக்கு அழைத்துச் சென்று, பயங்கரவாத பயிற்சி பெற ஏற்பாடு செய்தேன். அவர்களுக்கு, வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயிற்சி அளித்தனர். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.

