ADDED : மார் 03, 2024 02:50 AM

சென்னை : 'காவல்துறை, சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர, தி.மு.க.,வின் ஒரு பிரிவாக அல்ல' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சர்வதேச அளவிலான போதை பொருள் கடத்தல் தொடர்பாக, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் சிற்றரசுவுக்கு சொந்தமான சஹாரா கூரியர் நிறுவனத்தில், தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தியது.
இதுபற்றி செய்தி சேகரிக்க சென்ற, தனியார், 'டிவி' செய்தி சேனல் ஊடகவியலாளர்களை, அறையில் அடைத்து வைத்து தி.மு.க.,வினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, அவர் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல் துறை, தற்போது, 55 வயது பெண் ஒருவரை, ஊடகவியலாளர் மீது போலியான புகார் கொடுக்க வைத்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தி.மு.க.,வின் பேச்சை கேட்டு, காவல் துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல, அவர்கள் பணி தர்மத்துக்கு விரோதமானதும் கூட. காவல் துறை, சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர, தி.மு.க.,வின் ஒரு பிரிவாக அல்ல.
உடனே, ஊடகவியலாளர் மீது பதிவு செய்துள்ள பொய்யான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஊடகவியலாளரை தாக்கிய குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

