பள்ளி கல்வி முடிப்பவர்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்: முதல்வர் விருப்பம்
பள்ளி கல்வி முடிப்பவர்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்: முதல்வர் விருப்பம்
UPDATED : ஆக 09, 2024 01:02 PM
ADDED : ஆக 09, 2024 12:34 PM

கோவை: ‛‛ பள்ளி கல்வியை முடிக்கும் அனைவரும் திசை மாறாமல் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தினை, முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் துவக்கி வைத்தார்.
விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் நேற்று இரவே வங்கி கணக்கில் ரூ.ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. வரலாற்றில் நம் பெயர் நிலைக்கப் போகும் திட்டமாக தமிழ்ப்புதல்வன் திட்டம் இருக்கும்.
உயர்கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, அரசு பள்ளிகளில் மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிப்பவர்களுக்கும், 10ம் வகுப்புக்கு பிறகு அரசு ஐடிஐ உள்ளிட்ட தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள், உயர்கல்வி பயின்றால் அவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும்.
ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக்கும் நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு மட்டும் தான் மாத உதவித்தொகையா? எங்களுக்கு கிடையாதா? என மாணவர்கள் கேட்டனர். இதனை ஏற்று தமிழ்ப்புதல்வன் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.ஒரு தந்தையாக, குடும்பத்தில் ஒருவராக இருந்து தமிழ்ப்புதல்வன் திட்டத்தை உருவாக்கி உள்ளேன்.
பள்ளி கல்வி முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வி படித்தே ஆக வேண்டும். ஒரு மாணவர் கூட திசைமாறாமல் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்என்பதே எனது கனவு. தமிழக அரசின் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் மேல் நீங்கள் வைத்து இருக்கும் நம்பிக்கையை விட நான் அதிகம் வைத்துள்ளேன்.
எப்படிப்பட்ட தடைகளை சந்தித்தாலும் போராட வேண்டும். அப்படி போராடிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அனைவரும் பாராட்டக்கூடிய அளவுக்கு கொடிகட்டி பறந்து வருகிறார். தடைகளை கடந்து வென்று பாராட்டுகளை பெற்றது போல் மாணவர்களும் போராட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.