ADDED : பிப் 05, 2026 02:51 AM

சென்னை: தமிழ் அகராதியியல் ஆய்வாளரும், தமிழறிஞருமான வ.ஜெயதேவன், 79, சென்னையில் நேற்று காலமானார்.
சென்னை பல்கலை தமிழ் துறையின் முன்னாள் தலைவர் வ.ஜெயதேவன் நேற்று, சென்னை, பெருங்குடியில் உள்ள அவரது வீட்டில் வயது மூப்பால் காலமானார். திருச்சி மாவட்டம், உப்பிலாபுரத்தில் பிறந்த இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தாவரவியல், தமிழ் பாடங்களில் பட்ட மேற்படிப்புகளை முடித்து, சென்னை பல்கலையில், தமிழ் துறை பேராசிரியர், துறை தலைவர் பொறுப்புகளை வகித்தார்.
அகராதியியல், இலக்கணம், மொழி, இலக்கிய திறனாய்வு துறைகளில் நீண்டகால அனுபவம் மிக்க இவர், தமிழ்ச் சொற்களஞ்சிய மறுசீரமைப்புத் திட்ட தலைவராகவும் பணியாற்றினார். 'அரிமா நோக்கு' எனும் ஆய்விதழின் இணை ஆசிரியராகவும், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். பல்வேறு ஆய்வு நுால்களை எழுதியுள்ளார். அவரது இறுதிச்சடங்குகள், இன்று காலை 10:00 மணிக்கு நடக்க உள்ளன.
இவருக்கு, அன்பு தேவன் என்ற மகன் உள்ளார்.

