ADDED : செப் 16, 2026 01:13 PM

மதுரை: எங்கெல்லாம் கும்பாபிஷேகம் நடக்கிறதோ, அங்கு தமிழில் பாராயணம் செய்ய தமிழ் ஓதுவார்கள் அனுப்பப்படுவதாகவும், தமிழுக்கு நாம் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம், என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் ஓதுவார்களை அனுமதிக்கக்கோரி, கோவில் முன்பு தமிழ் ஓதுவார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், இந்தப் போராட்டம் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தமிழ் ஓதுவார்களைப் பொறுத்தவரைக்கும், எங்கெல்லாம் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நடக்கிறதோ, அந்தப் பூஜைகளை தமிழில் நடத்துவதற்கு தமிழில் பாராயணம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 27 ஓதுவார்களை ஸ்பெஷலாக இங்கு கொண்டு வந்து, கடந்த 11ம் தேதியில் இருந்து வேலை நடந்து கொண்டிருக்கிறது.
தமிழுக்கு நாம் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம். முதல்வர் எப்போதும் தமிழை முன்னிறுத்தக் கூடியவர். மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அவர்கள் நிச்சயமாக பங்கேற்பார்கள். அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் தான் கோவிலில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் யாரும் போராட்டம் நடத்தவில்லை, எனக் கூறினார்.
