UPDATED : ஆக 28, 2024 07:09 PM
ADDED : ஆக 28, 2024 05:57 AM

சென்னை : 'மத்திய அரசு தடை செய்துள்ள, 156 மருந்துகளை, தமிழகத்தில் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூல மருந்துகளின் கலவையை உள்ளடக்கிய, ஆயிரக்கணக்கான கூட்டு மருந்துகள், நாடு முழுதும் விற்கப்படுகின்றன. இவற்றின் செயல்திறன், எதிர்விளைவுகள் குறித்து, மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரிய நிபுணர் குழு ஆய்வு செய்தது. அதில், சளி, இருமல், சத்து மாத்திரைகள், இதயம், கல்லீரல் நலனுக்கான வைட்டமின் மருந்துகள், ஒவ்வாமை பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் என, 156 கூட்டு மருந்துகளால் எதிர்விளைவுகள் இருந்ததால், அவற்றை மத்திய அரசு தடை செய்துள்ளது.
அதனால், மத்திய அரசு தடை செய்த மருந்துகளை, தமிழக மருந்தகங்களில் விற்றால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என, மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது.
இதுபற்றி மருந்து உரிமம் வழங்குதல் மற்றும் அதிகார கட்டுப்பாட்டாளர் எம்.என். ஸ்ரீதர் கூறியதாவது: மத்திய அரசு தடை செய்துள்ள, 156 மருந்துகளை அக்., 22 முதல் யாரும் விற்கக்கூடாது. கையிருப்பில் இருக்கும் மருந்துகளை ஒரு மாதத்தில், தயாரிப்பு நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். அவர்கள் அம்மருந்தை அழிப்பர். அவ்வாறு அனுப்பாமல், மருந்தகங்களில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.