முறைகேட்டில் ஈடுபட்டால்... மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் எச்சரிக்கை
முறைகேட்டில் ஈடுபட்டால்... மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் எச்சரிக்கை
ADDED : ஆக 05, 2026 04:24 AM

சென்னை : 'மதுபானம் கொள்முதல், மதுக்கூட ஒப்பந்தம் வழங்குவதில், விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும். தனிநபருக்கு ஆதரவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட மேலாளர்களை, டாஸ்மாக் எச்சரித்துள்ளது.
சென்னை எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், மாவட்ட மேலாளர்களுடன், நேற்று உயரதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்தினர். இதில், டாஸ்மாக் மேலாளர்கள், பறக்கும் படையினர் பங்கேற்றனர். பின், கணினிமயமாக்கும் திட்டப் பணிகள் தொடர்பாக, மின் ஆளுமை முகமை நிறுவனத்தில், மேலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெரும்பாலான மாவட்ட மேலாளர்கள், சமீபத்தில் நியமிக்கப்பட்டவர்கள். மது கடைகளை ஒட்டி தின்பண்டம், குளிர்பானம் விற்பதற்கான, மதுக்கூட உரிமம் வழங்க, விரைவில் 'டெண்டர்' கோரப்பட உள்ளது. எனவே, மதுக்கூட ஒப்பந்தம் வழங்கும் பணியிலும், மதுபானம் கொள்முதல் செய்வதிலும், விதிகளை பின்பற்றி வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். தனிநபருக்கு ஆதரவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பயிற்சியின்போது தெரிவிக்கப்பட்டது.
கடைகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, மது பாட்டிலுக்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட, கூடுதலாக பணம் வசூலிக்கும் கடை பணியாளர்கள் அனைவர் மீதும், 'சஸ்பெண்ட்' உள்ளிட்ட நடவடிக்கைகளை, தாமதமின்றி எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
