அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை; தஞ்சாவூரில் கொடூரம்!
அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை; தஞ்சாவூரில் கொடூரம்!
UPDATED : நவ 20, 2024 02:24 PM
ADDED : நவ 20, 2024 11:41 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி என்பவர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 26. இவர் ஆசிரியை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். பள்ளி வகுப்பறையில் இன்று (நவ.,20) ரமணியை சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன் குமார் குத்திக்கொலை செய்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மதன் குமாரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை ரமணியை பெண் கேட்டு சென்ற போது, விருப்பம் இல்லை என கூறியதால், மதன் கொலை செய்ததாக, முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், வகுப்பறையில் கழுத்தில் குத்தி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தலைமையாசிரியர் கடிதம்!
இது குறித்து, தலைமையாசிரியர் வெளியிட்டுள்ள கடிதம்: தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியராக ரமணி 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தமிழ் பாடம் போதித்து வந்தார். இவருக்கு இன்று முதல் பாடவேலையில் வகுப்பு கிடையாது என்பதால் அவர் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறையில் இருந்தார்.
இன்று காலை 10:10 மணிளவில் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறையின் வரண்டா பகுதியில் சின்னமனையை சேர்ந்த மதன் என்பவர் ஆசிரியை ரமணியுடன் நின்று பேசி கொண்டிருந்தார். எதிர்பாரத விதமாக ஆசிரியர் ரமணியின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயற்சி செய்தான். அவனை இப்பள்ளியின் ஆசிரியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆசிரியர் ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டார். இது குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.