கரையான் அரித்த ஒரு லட்ச ரூபாய்: கூலித்தொழிலாளி கண்ணீர்
கரையான் அரித்த ஒரு லட்ச ரூபாய்: கூலித்தொழிலாளி கண்ணீர்
ADDED : மே 06, 2025 05:59 PM

சிவகங்கை: கூலித்தொழிலாளி ஒருவர் மண்ணில் புதைத்து வைத்த ரூ.1 லட்சம் மதிப்பிலான நோட்டுகள் கரையான் அரித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிளாதரி கிராமத்தில் முத்து கருப்பி (30). கூலி தொழிலாளி. ஏழ்மையில் வாடும் அவர் குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைக்க திட்டமிட்ட அவர், இதற்காக தகர உண்டியல் ஒன்றை தயார் செய்துள்ளார்.
தினமும் சம்பள பணத்தை ரூ.500 ஆக மாற்றி, அந்த உண்டியலில் போட்டு வீட்டிற்கு உள்ளேயே பள்ளம் தோண்டி மண்ணில் புதைத்து வைத்துள்ளார். அந்த வகையில் அவர் ரூ.1 லட்சம் வரை அவர், தகர உண்டியலில் சேர்த்து வைத்து உள்ளார்.
மகளுக்கு காதணி விழா நடத்த இன்று காலை உண்டியலை திறந்து பார்த்த போது, அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. சிறுக சிறுக ஒரு வருடத்திற்கு மேலாக சேமித்த பணத்தை கரையான் அரித்துள்ளது. சேமிப்பு பணம் முழுதும் வீணாகிவிட்டதால், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் கண்ணீர் வடிக்கும் முத்து கருப்பி, தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்