மாணவர்கள் நாட்டிற்கு சேவை செய்ய உதவும் வகையில் பாட புத்தகங்கள் இருக்கணும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் வலியுறுத்தல்
மாணவர்கள் நாட்டிற்கு சேவை செய்ய உதவும் வகையில் பாட புத்தகங்கள் இருக்கணும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் வலியுறுத்தல்
UPDATED : நவ 24, 2025 05:23 PM
ADDED : நவ 24, 2025 05:21 PM

சென்னை: 'அடுத்த பத்து வருடங்களுக்கு மாணவர்கள் திறம்பட படிக்கவும், நாட்டிற்கு சேவை செய்யவும் உதவும் வகையில் பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கான ஆலோசனை நடந்து வருகிறது' என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:இந்தியா மற்றும் தமிழகத்தின் அடிப்படைகளை, அதாவது தமிழர்கள் எல்லோருக்கும் ஒரு குணம் உண்டு. விருந்தோம்பல், விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை, மற்றவர்களை மதிக்கிற மனப்பான்மை, இதையெல்லாம் பாடத்திட்டத்தில் கதை வடிவிலாவது கொண்டு செல்ல வேண்டும். அடுத்த பத்து வருடம் பாட புத்தகங்கள் எப்படி இருக்க வேண்டும்.
நமது மாணவர்கள் நன்றாக படித்து, நாட்டிற்கு சேவை செய்து, நமது நாட்டை ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டுமென்றால், எப்படி தமிழகத்தில் உள்ள பாடப் புத்தகங்களில் சிலபஸ் எல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பவுண்டேசன் சரியில்லை என்றால், மேலே சென்று எதுவும் செய்ய முடியாது. தொடக்க கல்வியில் இருந்து உயர்கல்வி வரை பாடத்திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
2047ம் ஆண்டுக்குள் நமது நாடு வளர்ந்த நாடாக மாற வேண்டும். பள்ளிக் கல்வியில் வலுவான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வியில், மாணவர்களுக்கு நிறைய அறிவை நாம் உருவாக்க வேண்டும். இது பாடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியும் முக்கியம். இந்த அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துவதில் நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை. நிறைய நிபுணர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. எனவே, இது ஒரு சரியான பாடத்திட்டத்தை உருவாக்கு வதற்கும், நமது மாணவர்களுக்கு உதவுவதற்கும், எதிர்கால இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கும் மிகச் சிறந்த பலனைத் தரும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு நாராயணன் கூறினார்.

