ADDED : மார் 08, 2024 01:54 AM
சென்னை:அனைத்து வகையான கட்டட அனுமதி மற்றும் மனைப்பிரிவு வரைபடங்களையும் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வசதியை, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்டப்படி, சென்னைக்கு வெளியில் உள்ள பகுதிகளுக்கு கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம், டி.டி.சி.பி.,க்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், டி.டி.சி.பி., மாவட்ட அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்குகின்றன. தற்போது, கட்டுமான திட்ட அனுமதி பணிகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இவற்றில், ஒற்றைச்சாளர முறைக்காக புதிய இணையதளமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனால், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக வழங்கப்படும் கட்டுமான திட்ட அனுமதி விபரங்களும், டி.டி.சி.பி., அதிகாரிகள் பார்வைக்கு வரும் நிலை உருவாகி உள்ளது.
இவ்வாறு ஒற்றைச் சாளர முறை இணையதளத்தில் வழங்கப்படும் அனைத்து கட்டட அனுமதி விபரங்களையும் வெளிப்படையாக்க டி.டி.சி.பி., முடிவு செய்தது.
இதுகுறித்து, டி.டி.சி.பி., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒற்றைச்சாளர முறை இணையதளம் வாயிலாக வழங்கப்படும் கட்டுமான திட்ட அனுமதி விபரங்களை, பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டி.டி.சி.பி.,யின் ஒற்றைச்சாளர முறைக்கான www.onlineppa.tn.gov.in இணையதளத்தில், இதற்காக புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.
இதில், டி.டி.சி.பி.,யில் மாவட்ட அலுவலகங்கள் வாயிலாக வழங்கப்பட்ட கட்டுமான திட்ட அனுமதி உத்தரவு, வரைபட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிதாக வீடு வாங்குவோர் சம்பந்தப்பட்ட திட்டம் குறித்த பின்னணி தகவல்களை அறிய, இது உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

