உயர் பதவிகளை வகிப்பதால் மட்டுமே யாரும் விதிவிலக்கு கோர முடியாது; தீபத்தூண் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
உயர் பதவிகளை வகிப்பதால் மட்டுமே யாரும் விதிவிலக்கு கோர முடியாது; தீபத்தூண் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
UPDATED : மார் 08, 2026 07:12 AM
ADDED : மார் 08, 2026 12:13 AM

மதுரை: 'ஒத்திவைப்பு கலாசாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த மாத இறுதிக்குள் ஏதேனும் ஒரு வழியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்படும்' என, திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தில் கலெக்டர், கமிஷனர் மீதான அவமதிப்பு வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்துாண் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால், மதுரை கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலராக இருந்த யக்ஞ நாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
மார்ச் 4ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு முழு விபரம் நேற்று வெளியானது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்த அவமதிப்பு வழக்கில், திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர்கள் சத்யப்ரியா, மணிசெல்வன், பொம்மதேவன், சண்முக சுந்தரம், ராமையா ஆகியோரை சேர்க்கவும், போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யவும் நீதிமன்றம் நினைத்தது.
அவர்களின் வழக்கறிஞர்கள், 'தீபத்துாண் அருகே ஐந்து பேரை பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என, மார்ச் 2ல் நீதிமன்றம் தெரிவித்த பரிந்துரையை பரிசீலித்து கவனமாக முடிவெடுக்க வேண்டும். அறநிலைய துறையுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்பட வேண்டும். அதற்கு அவகாசம் வேண்டும்' என்றனர். இக்கோரிக்கையை ஏற்று, விசாரணையை இன்னும் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கிறேன்.
அன்று அறங்காவலர்கள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. போலீஸ் அதிகாரிகள் அடுத்த விசாரணை தேதியில் ஆஜராக வேண்டும். வழக்கு மார்ச் 18ல் விசாரணைக்கு எடுக்கப்படும். அன்று போலீஸ் அதிகாரிகள் தகுந்த பதில் அளிக்காவிட்டால், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். தினமும் விசாரணை நடத்தப்படும் என, அதிகாரிகளை எச்சரிக்கிறேன்.
ஒத்திவைப்பு கலாசாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த மாத இறுதிக்குள் ஏதேனும் ஒரு வழியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்படும். உயரதிகாரிகள் பொறுப்பற்ற கருத்துகளை தெரிவித்தால், அவர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றுதான். உயர் பதவிகளை வகிப்பதால் மட்டுமே யாரும் விதிவிலக்கு கோர முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு உத்தரவிட்டார்.

