தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே முதல்வருக்கு தெரியாது: சண்முகம்..
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே முதல்வருக்கு தெரியாது: சண்முகம்..
ADDED : டிச 22, 2024 02:05 AM
விழுப்புரம்: “அதிகாரிகள் கூறுவதை முழுக்க முழுக்க நம்பியே, முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். அதனாலேயே, இந்த ஆட்சி அலங்கோல ஆட்சியாக உள்ளது,” என, முன்னாள் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரம் நகராட்சி திடலில் அ.தி.மு.க., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:
பெஞ்சல் புயல் காரணமாக, கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. திருமண மண்டபத்திற்கு, மக்களை வரவழைத்து, நிவாரண பொருட்களை வழங்கிவிட்டுச் சென்றனர்.
சென்னையில் மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோல், விழுப்புரம் உள்ளிட்ட மூன்று மாவட்ட மக்களுக்கும், 6,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் என்ன நடக்கிறது என முதல்வருக்கு தெரியாது. ஒரு சில அதிகாரிகள் கூறுவதை மட்டும் நம்பி, முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார். அதனாலேயே, தி.மு.க., ஆட்சி அலங்கோல ஆட்சியாக உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் முதல் வி.ஏ.ஓ.,க்கள் வரையிலான அலுவலர்கள் யாரும் முறையாக சென்று ஆய்வு செய்யவில்லை.
தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மையாலேயே மூன்று மாவட்டங்களில் அதிக வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு சண்முகம் பேசினார்.