மதுரையில் ஏறு தழுவுதல் அரங்கம் திறந்து வைக்கிறார் முதல்வர்
மதுரையில் ஏறு தழுவுதல் அரங்கம் திறந்து வைக்கிறார் முதல்வர்
ADDED : ஜன 18, 2024 01:01 AM
சென்னை:'தமிழரின் வீர விளையாட்டை ஊக்குவிப்போம். எக்காலத்திலும் பண்பாட்டை காப்போம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழரின் வீர விளையாட்டான ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டு நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள், களத்தில் சந்தித்துள்ளனர்.
புழுதி பறந்த நிலத்தில் நடந்த, பண்பாட்டு நிகழ்வை, மூன்று லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற காளைகளும், வீரர்களும், பரிசுகள் பெற்றனர். திராவிட மாடல் ஆட்சியில், பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும், ஏறு தழுவுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாக, 'கருணாநிதி நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்' கட்டப்பட்டுள்ளது.
இதை வரும் 24ம் தேதி திறந்து வைத்து, போட்டிகளைக் காண, மதுரை, அலங்காநல்லுார், கீழக்கரைக்கு வருகிறேன். தமிழரின் வீர விளையாட்டை ஊக்குவிப்போம். எக்காலத்திலும் பண்பாட்டை காப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.