மடியில் கனம் இருப்பதால் தான் தி.மு.க.,விற்கு பயம்; இ.பி.எஸ்., பாய்ச்சல்
மடியில் கனம் இருப்பதால் தான் தி.மு.க.,விற்கு பயம்; இ.பி.எஸ்., பாய்ச்சல்
ADDED : டிச 31, 2024 12:24 PM

சென்னை: 'மடியில் கனம் இருப்பதால் தான் தி.மு.க.,விற்கு பயம். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது தானே? என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில், இ.பி.எஸ்., நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை சம்பவம் இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எப்.ஐ.ஆர்., வெளியானது தவறான முன்னுதாரணம். எப்.ஐ.,ஆர்., வெளியானது எப்படி? உண்மை குற்றவாளிகள் தப்பித்து விட கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க., போராட்டம் நடத்தியது. உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அ.தி.மு.க., நோக்கம்.
குற்றவாளி
எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த சார் யார்? இது குறித்து போலீசார் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். உண்மை குற்றவாளி தப்பிக்க கூடாது என அ.தி.மு.க., குரல் எழுப்புகிறது. வேண்டப்பட்ட நபரைக் காப்பாற்ற அமைச்சர்கள் வரிந்து கட்டிக்கொண்டு பேசுகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உடனடியாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டோம்.
தி.மு.க.,விற்கு பயம்
மாநில அரசு பாலியல் வன்கொடுமை அடைந்த பெண்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யவில்லை. மடியில் கனம் இருப்பதால் தான் தி.மு.க.,விற்கு பயம். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது தானே?. கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் திட்டத்திற்கு முதலில் கோரிக்கை விடுத்தது நான் தான். இந்த திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கோவிட் தொற்று காரணத்தினாலும், சுற்றுச்சூழல் அனுமதி பெற தாமதம் ஆனதாலும் நிறைவேறாமல் போனது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.