'அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் கீழடி அகழாய்வு துவங்கப்பட்டது': இபிஎஸ்
'அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் கீழடி அகழாய்வு துவங்கப்பட்டது': இபிஎஸ்
ADDED : ஜூலை 31, 2025 01:38 AM

கீழடி: 'தமிழகத்தில் நடந்து வரும் 39 அகழாய்வில் 33 அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டவை' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று பார்வையிட்டார். அப்போது, மதுரை பாத்திமா கல்லுாரி மாணவியர் அவரை சந்தித்தனர்.
தரமான லேப்டாப் அவர்களிடம் பேசிய பழனிசாமி, 'அ.தி.மு.க., ஆட்சியமைத்த உடன் கல்லுாரி மாணவியருக்கு தரமான லேப்டாப் வழங்கப்படும்' என உறுதியளித்தார்.
பின் பழனிசாமி கூறியதாவது:
தமிழர் நாகரிகத்தை பறைசாற்றும் கீழடி அகழாய்வு, அ.தி.மு.க., ஆட்சியில் தான் துவங்கப்பட்டது. தமிழகத்தில் நடந்து வரும் 39 அகழாய்வில் 33 அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டவை.
'கீழடி என் தாய்மடி' என அறிவித்தது; அருங்காட்சியகம் கட்ட இடம் தேர்வு செய்து கட்டட பணிகள் துவங்கியது; தற்காலிகமாக, மதுரை தமிழ்ச்சங்கத்தில் கீழடி பொருட்களை காட்சிப்படுத்தியது என அனைத்துமே அ.தி.மு.க., ஆட்சியில் தான் நடந்தன.
கீழடியை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழகத்தில் உள்ள 96 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதல்வர்கள் இல்லை. ஏராளமான கல்லுாரிகளில் பேராசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அஜித்குமார் வீட்டில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டுக்கு, பழனிசாமி நேற்று சென்றார்.
அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன் குமாரை சந்தித்து ஆறுதல் கூறிய பழனிசாமி, அ.தி.மு.க., சார்பில் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தார்.
பின்னர், அவர் கூறுகையில், “அ.தி.மு.க., அழுத்தத்தால், வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. அஜித்குமார் உடலில் 44 இடங்களில் காயம் இருந்துள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் சட்டம் - -ஒழுங்கு சீர்கெட்டு விட்டது,” என்றார்.