'போதையில் இருந்து மாணவர்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கும் உண்டு'
'போதையில் இருந்து மாணவர்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கும் உண்டு'
ADDED : ஜன 04, 2026 04:12 AM

சிவகங்கை. ஜன.4: தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகளுக்கு முன் போதை வஸ்துகள் விற்கும் நிலை உள்ளது. பிள்ளைகளை போதைப் பழக்கத்தில் இருந்து காப்பதற்கு பெற்றோருக்கு கடமை இருப்பது போல் அரசுக்கும் கடமை உள்ளது என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் கூறியதாவது: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில் முன்னாள் கவர்னர் தமிழிசையை நீ வா போ என்று பேசியது என்ன நாகரிகம். இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்தவர் தமிழிசை. அரசியல் பாரம்பரியம் உள்ளவர். நேற்றைய தினம் சுசீந்திரத்தில் பாரத் மாதா கி ஜே என்று கோஷம் போட்டவுடன் ஏன் அமைச்சர் சேகர்பாவிற்கு கோபம் வருகிறது. சேகர்பாபுவின் நடவடிக்கை ஹிந்து விரோதமாக உள்ளது.
பழநி முருகன் கோவிலில் முருகன் மாநாடு நடத்தியதற்கு கணக்கு கொடுக்கவில்லை. உயர் நீதிமன்றமே 76 கோயில்களுக்கு கணக்கு கொடுக்கவில்லை என்று கூறி கணக்கு உடனே கொடுக்கக் கூறியுள்ளது.
போதையில் குழந்தைகள் ஆட்படாமல் பெற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். ஆனால் அப்பாவான நீங்கள் டாஸ்மாக் கடையை திறந்து வைத்துள்ளீர்கள். கவர்னர் சங்கரன்கோவிலில் போதை ஒழிப்பு மாநாட்டில் கேட்ட கேள்விக்கு இன்று வரை முதல்வரிடமிருந்து பதில் வரவில்லை. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகளுக்கு முன் போதை வஸ்துகள் விற்கும் நிலை உள்ளது. பிள்ளைகளை போதைப் பழக்கத்தில் இருந்து காப்பதற்கு பெற்றோருக்கு கடமை இருப்பது போல் அரசுக்கும் கடமை உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பற்றி பேச ஒன்றுமே இல்லை. திருத்தணியில் போதையில் பட்டாகத்தி வைத்துக் கொண்டு இளைஞர்கள் ஒடிசா மாநில இளைஞரை தாக்குகின்றனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கோயம்புத்துாரில் கொலை செய்யப்படுகிறார். அவசரமாக 24 மணி நேரத்தில் எவ்வாறு பிரேத பரிசோதனை செய்தார்கள். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இரண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 2026ல் தி.மு.க., அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்றார்.

