அமைச்சர் நேரு தம்பி உள்ளிடோருக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்
அமைச்சர் நேரு தம்பி உள்ளிடோருக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்
ADDED : ஜூலை 08, 2025 12:52 AM

சென்னை: அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மீது, சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. இவரது தம்பி என்.ரவிச்சந்திரன். இவர் இயக்குநராக உள்ள, 'ட்ரூடோம் இ.பி.சி., இந்தியா' நிறுவனம், 2013ல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் 30 கோடி ரூபாய் கடன் பெற்றது.
இத்தொகையை கடன் பெற்ற நிறுவனம், தன் சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதன் வாயிலாக, தங்களுக்கு 22.48 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என, வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்படி, அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது, 2021ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. பின், அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் மகன் வீடு, அலுவலகம் என, 15க்கும் மேற்பட்ட இடங்களில், சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கு விசாரணை, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான கடந்த விசாரணையின் போது, சி.பி.ஐ., வழக்கை அடிப்படையாக வைத்தே, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
எனவே, சி.பி.ஐ., வழக்கை ரத்து செய்ய கோரும் வழக்கில், அமலாக்கத் துறையை இணைக்க அனுமதி வழங்க வேண்டும் என, அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மனுதாரர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
அப்போது, 'ஆவணங்களை பார்க்கும் போது, இந்த வழக்கில் மோசடி எதுவும் நடக்கவில்லை. அரசு ஊழியர்கள் யாரும் இந்த வழக்கில் சம்பந்தப்படவில்லை என்று தெரிகிறது. எனவே, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீதான சி.பி.ஐ., வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.
மேலும், 'கடன் தொகையை ஒரே தவணையில் திரும்ப செலுத்துவதாக, வங்கிக்கடன் தீர்ப்பாயத்தில் உறுதி அளிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு செய்யாததால், சி.பி.ஐ., இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
'இதன் காரணமாக, சி.பி.ஐ.,க்கு தேவையில்லாத கால விரயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு, 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
'இந்த தொகையில், 15 லட்சத்தை சி.பி.ஐ.,க்கும், 15 லட்சத்தை தமிழக சமரச தீர்வு மையத்துக்கும் செலுத்த வேண்டும்' என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

