ஜாதி, மதம் வெறியரின் எண்ணம் இம்மண்ணில் நிறைவேறாது:* முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
ஜாதி, மதம் வெறியரின் எண்ணம் இம்மண்ணில் நிறைவேறாது:* முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
ADDED : டிச 06, 2024 07:23 PM
சென்னை:''நான் இருக்கும் வரை, மதம், ஜாதி வெறியினரின் எண்ணம், இம்மண்ணில் நிறைவேறாது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக்கும் திட்டத்தில், 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை, முதல்வர் ஸ்டாலின், நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பின், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கடனுதவி, துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை, நரிக்குறவர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
பின், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நம் நாடு சுதந்திரம் பெற்ற பின், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு என தனியாக முதல்முறையாக தொழில் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார மேம்பாடு அடைய, 'அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தொழில் முதலீட்டுக்கு, 35 சதவீதம் மானியம்; 65 சதவீதம் வங்கி கடனாக வழங்கப்படுகிறது. இதில், 1,303 தொழில் முனைவோருக்கு மானியமாக, 160 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று மூன்றாண்டு கால ஆட்சியில், இதுவரை இல்லாத மற்றும் எந்த ஆட்சியிலும் நடக்காத திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். சமூகத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் எத்தனை செய்தாலும், அரசுக்கு களப் பணியில் நல்லபெயர் கிடைக்க, முக்கிய காரணமாக துாய்மை பணியாளர்கள் தான் உள்ளனர். அதற்காக, அவர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடாகாது.
துாய்மை பணியாளர்கள் நல வாரியத்தில், 2021ம் ஆண்டுக்கு முன் வரை, 18,225 பேர் மட்டுமே பதிவு செய்திருந்தனர். அரசின் நலத் திட்டங்களால், 3.06 லட்சம் பேர் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர். இந்த வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு, 90 சதவீத மானியத்துடன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் வழங்கப்படுகின்றன.
நமது லட்சிய பயண வழியில், ஒருசில தடைகள், இடர்பாடுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. உடனே, அதை மட்டும் சிலர் பெரிதுப்படுத்தி, அரசியலாக பார்க்க என்னென்ன பேசுகிறார்கள். 'இதுதான் பெரியார் மண்ணா, அம்பேத்கர் மண்ணா' என, கேள்வி கேட்கின்றனர்.
ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல், அதில் அரசின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளாமல், தெரிந்திருந்தாலும் திட்டமிட்டு வதந்திகளை பரப்பி, அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கின்றனர்.
அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன், உங்கள் மத வெறி, ஜாதி வெறி எண்ணம், இந்த மண்ணில் ஒருபோதும் நிறைவறாது. இந்த ஸ்டாலின் இருக்கும் வரை, உங்களால் நிறைவேற்றவும் முடியாது.
ஈ.வெ.ரா.,வும் அம்பேத்காரும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு, எதிர் நீச்சல் போட்டுதான் லட்சிய பயணத்தை தொடர்ந்தனர். அவர்களின் கொள்கை வழியில், சமூகத்தில் நிலவும் இடர்பாடுகளை நீக்கி, சமூகத்தை பிளவுப்படுத்தும் சக்திகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, சமூக நீதி கொள்கையை நிலைநாட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.